

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் தவெக ஈடுபட்டுள்ளது. காங்கிரஸ் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இதற்கிடைய இன்று (7.05.2026) விஜய் முதலமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி விஜய் முதலமைச்சராக பதியேற்றதும் தனது முதல் கோப்பில் எந்தத் திட்டத்திற்காகக் கையெழுத்திடுவார் என்பதுதான் தற்போது தமிழகத்தின் ‘ஹாட்’ டாபிக்.
அதாவது முதலமைச்சராக ஆயிரக்கணக்கான கோப்புகளில் கையெழுத்திடுவது சாதாரணமான நடைமுறை என்றாலும் தமிழக அரசியலில் ‘முதல் கையெழுத்து’ என்பது வெறும் நிர்வாக நடைமுறையாக மட்டும் பார்க்கப்படாமல், மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொல்லாடலாக உருவெடுத்துள்ளது.
2016-ல் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்ற போது 500 மதுக்கடைகளை மூடல், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களில் முதலில் கையெழுத்திட்டார். அதேபோல் 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதியேற்றதும் முதலில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், ரூ.4000 கொரோனா நிதியுதவி, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அந்த வரிசையில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்து ஏதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது. தவெக-வின் இந்த மாபெரும் வெற்றிக்கு பெண்களின் வாக்குகள் முக்கியக் காரணமாக இருந்ததால், அவர்களைக் கவரும் விதமான அறிவிப்புதான் முதல் திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கணிசமான அளவு பெண்கள் வாக்குகள் வந்திருப்பதால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2500 ரூபாய் நிதி உதவி வழங்கக்கூடிய திட்டத்தில் விஜய் முதலில் கையெழுத்திடுவார் அல்லது திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கக்கூடிய திட்டத்தில் அவர் கையெழுத்திடுவார் என்று சொல்லப்படுகிறது.
விஜய்யின் முதல் கையெழுத்து பெண்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் இருக்கும் என்பதில் அவரது கட்சி நிர்வாகிகள் உறுதியாக உள்ளனர்.
பதவியேற்பு விழா முடிந்த கையோடு, கோட்டைக்குச் சென்று விஜய் போடப்போகும் அந்த முதல் கையெழுத்தைப் பார்க்க ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.