

வாக்குப்பதிவு முடிந்து தமிழகத்தின் அரசியல் களம் குழம்பியிருக்கும் நிலையில் , நாளை பனையூரில்(ஏப்ரல்.30) தமிழக வெற்றி கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு கடும் போட்டியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் பார்க்கப்பட்டது. இந்த சட்டமன்ற தேர்தலில் விஜயின் வருகை ஏதேனும் ஒரு கட்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கை மே 4 தேதி நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மற்றும் 4 முனை போட்டி நிலவியது , ஒரு சில இடங்களில் இந்த போட்டி 5 முனையாகவும் மாறி உள்ளது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுக மிக கடுமையாக முயற்சி செய்து வருகிறது. அதே வேளையில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அதிமுக மற்றும் பாஜக கூட்டணியும் தீவிரமாக இருக்கிறது.
இந்த சூழலில் விஜயின் அரசியல் வருகை பெரும் புயலை கிளப்பியுள்ளது. தமிழகம் முழுக்க 233 தொகுதிகளில் தவெக போட்டியிட்டுள்ளது. விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கடந்த சில தினங்களாக விஜய் கோயில் கோயிலாக சென்று வருகிறார் . நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர், இன்று சீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
சில தினங்களுக்கு முன் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த விஜய், தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அந்த ஆலோசனையில் வாக்கு எண்ணிக்கை என்று தனது கட்சியினர் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும், பின்னர் நடைபெறும் அரசியல் சூழ்நிலை பற்றியும் ஆராய்ந்தார்.
தற்போதைய அரசியல் சூழல் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் உள்ளது. வெளிவரும் கருத்துக்கணிப்புகளின் படி ஒரு சில கணிப்புகள் திமுகவிற்கு ஆதரவாகவும் ஒரு சில கணக்குகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகவும் இருக்கின்றன. பொதுவாகவே தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டசபை அமையும் சூழலில் இருக்கும் என்று அரசியல் நிபுணர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் , சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறும் எண்ணிக்கைகள் நிச்சயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் , நாளை தனது கட்சியின் வேட்பாளர்களை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் தவெக தலைமையகமான பனையூரில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தங்களது கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டுள்ள 233 வேட்பாளர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரும் வேட்பாளர்கள் கட்டாயம் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்ட 17C ஒரிஜினல் படிவத்தை எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை அன்று வேட்பாளர்கள் , அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களிலேயே இருக்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையின் போது சந்தேகத்திற்கு இடமான ஏதேனும் நடவடிக்கைகள் இருந்தால் உடனடியாக தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சியின் நிர்வாகிகளுடன் நேரடியாக தொடர்பில் இருக்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக தலைமையகத்திற்கு வரவேண்டும் , போன்ற ஆலோசனைகள் நாளை வழங்கப்படும் என்று தெரிகிறது.
.