

தவெக அலுவலகத்தில் என்.ஆனந்த் முன்னிலையில் இணையும் மாற்றுக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்.தவெகவில் இணைய காலை முதல் அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பனையூரில் காத்து கிடக்கின்றனர்.
காலை 11 மணிக்கு இணைப்பு விழா எனக் கூறப்பட்ட நிலையில் காலை 9:00 மணி முதலே அதிமுக, அமமுக நிர்வாகிகள் பனையூரில் காத்திருந்தனர். காலை 10 மணிக்கு பிறகு முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட சிலரை மட்டும் பனையூர் அலுவலகத்திற்கு உள்ளே அனுமதித்தனர்.
பாஜகவில் இருந்து விலகி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி தவெகவில் இணைய உள்ளார். அவருக்கு பாஜகவில் எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் பச்சைமால், திருவண்ணாமலையைச் சேர்ந்த முன்னாள் எம்பிக்கள் வனரோஜா, இளவரசன் ஆகியோரும் இணைகின்றனர். அதிமுகவின் வட சென்னை வடக்கு மாவட்டத்தின் செயலாளராக இருக்கும் முன்னாள் எம்பி பாலகங்காவும் இன்று தவெகவில் இணைகின்றனர்.
பலரும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று எண்ணி தவெகவில் வந்து இணைகின்றனர். பல்வேறு கட்சியில் இருந்து வந்து இணையும் அனைவருக்கும் ஒரு உறுதி மொழி அளிக்கப்படுகிறது. அதாவது புதிதாக வந்து இணையும் மாற்றுக் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும், உரிய பொறுப்பும் வழங்கப்படும் என்று உத்தரவாதம் ஒன்று வாய்மொழியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவாதம் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அவர்களுக்கான முக்கியத்துவம் கட்சியில் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதால் அனைத்து மாற்றுக் கட்சிகளில் இருந்தும் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவதற்கு வருகின்றனர்.
அண்மையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 7 முன்னாள் எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இவர்களில் சிலர் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தபோது காத்திருந்த சம்பவமும் பெரிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கோவை உள்ளிட்ட பகுதிகளில் அமமுக முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தவெகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தற்போது முதலமைச்சர் விஜயாக மாறியுள்ளார். அதே நேரம் அதிமுகவானது தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படு தோல்வியை சந்தித்து வருகிறது. 2 சட்டமன்ற தேர்தல், 2 நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது.
இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த அதிமுகவினருக்கு ஷாக் கொடுத்துள்ளது தவெக. இதனையடுத்து அதிமுகவில் இருந்து தவெகவிற்கு அடுத்தடுத்து முக்கிய தலைவர்கள் தாவி வருகிறார்கள்.