

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் புதுப்புது அதிரடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கி வெறும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆன தவெக கட்சி கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளை மண்ணை கவ்வ வைத்தது வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் புதுப்புது மாற்றங்களை சந்தித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவுக்குள் கருத்து வேறுபாடுகள், அதிமுகவில் அரங்கேறி வரும் உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத சூழலில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என பலரும் வேகவேகமாக அதிமுகவிலிருந்து விலகி மாற்று கட்சிகளை தேடி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அதிமுகவில் இருந்து சமீபத்திய நாட்களில் முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், என்.ஆர். சிவபதி, கடம்பூர் சி. ராஜு, மற்றும் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 முக்கிய தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ஆளும் தவெகவில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய நிர்வாகிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர். அதிமுகவின் உட்கட்சி அதிருப்தி மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகள் தவெகவில் தெரிவதாகக் கூறி இந்தத் தலைவர்கள் அடுத்தடுத்து கட்சி மாறியுள்ளனர்.
இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் ஜூன் 10-ம்தேதி திமுகவில் இணைந்து அரசியல் களத்தை அதிரவிட்டுள்ளார். இந்த திடீர் தாவல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழக அரசியலில் புதிய சலசலப்பை உருவாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தவர்களே இவ்வாறு தவெக, திமுகவை நோக்கிச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதிமுகவில் இருந்து ஒருவர் பின் ஒருவராக கட்சி தாவலில் ஈடுபட்டு வரும் அதேவேளையில் திமுகவில் இருந்து எந்த எம்எல்ஏக்களோ, கட்சி உறுப்பினர்களோ விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ல் கொளத்தூர் தொகுதியில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஸ்டாலின் 2026 தேர்தலில் தோற்றிருப்பது, வழக்கமான ஆட்சிக்கு எதிரான மனநிலையை விடப் பெரிய ஒரு காரணத்தைக் காட்டுகிறது.
இது, பதவியில் இருக்கும் ஒரு தமிழக முதல்வர் தனது சொந்தத் தொகுதியிலேயே சந்தித்த அரிதான தோல்விகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அவருடன், துரைமுருகன், பி. கீதா ஜீவன், எம்.ஏ. சுப்பிரமணியன், டி.எம். அன்பரசன், நசார், மதிவேந்தன் மற்றும் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்களும் தோல்வியடைந்தனர்.
தேர்தலில் தோல்வியை சந்தித்தபோதும் திமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகாமல் இருப்பதற்கும், தொடர்ந்து கட்சியில் நீடிப்பதற்கும் அதன் வலுவான உட்கட்சி கட்டமைப்பு, சித்தாந்தப் பிடிப்பு, மற்றும் குடும்ப அரசியல் மீதான நம்பிக்கை ஆகியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
குறிப்பாக திமுகவின் வலுவான தலைமை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, அதிருப்தியாளர்கள் எளிதாக கட்சியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கிறது.
குறிப்பாக திமுகவின் வலுவான தலைமை, கட்டுப்பாட்டு அமைப்பு, பெரியார் மற்றும் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் திராவிட சித்தாந்தத்தின் மீதுள்ள தீவிர பற்று போன்றவை தலைவர்களை ஒன்றிணைத்து வைத்திருப்பதுடன் அதிருப்தியாளர்கள் எளிதாக கட்சியை விட்டு வெளியேறுவதையும் தடுக்கிறது.
தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரின் தலைமையின் கீழ் கட்சி ஒருமுகப்படுத்தப்பட்டு இயங்குவதால், மாற்றுத் தலைமைக்கான தேவையோ அல்லது அதிருப்தியோ முன்னணி தலைவர்களிடையே பெரிதாக எழுவதில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம், பதவிகள் மற்றும் அரசியல் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்படுவதுடன் சிறிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு, தலைவர்கள் ஒருங்கிணைக்கப்படுகிறார்கள்.
இதனால், கட்சியில் யாரையும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மை திமுகவின் பலமாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவில் அதிகாரத்தை அடைய மு.க.ஸ்டாலினுக்குப் பல தசாப்த காலக் காத்திருப்பு தேவைப்பட்டது. மறுபுறம், ஒற்றைத் தலைமை இல்லாமல் அதிமுகவும் தனது பழைய செல்வாக்கை இழந்து தடுமாறி கொண்டிருக்கிறது. ஆனால் இவை இரண்டையும் தாண்டி, தமிழ்நாட்டில் இவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்த பாரம்பரிய அரசியலும், மரபுவழி அதிகாரமும் எவ்வளவு சுலபமாக உடைக்கப்படக்கூடியவை என்பதை நிரூபிக்க, விஜய்க்கு ஒரே ஒரு தேர்தல் மட்டுமே போதுமானதாக இருந்தது.