

உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் விசாரணை நடத்திய தஞ்சை போலீசார் பின்னர் அவரை விடுவித்தனர்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை திரிஷா குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தவெக மகளிர் அணி சார்பில் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி சங்கர்ராமன் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
தஞ்சை பொதுக்கூட்டத்தில் பேசியது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, பகைமை, கலவரத்தை தூண்டும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைத்து உதயநிதியை தஞ்சை மாவட்ட காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் -1க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மறுபக்கம் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் கடந்து கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான விஜய் நாராயணன், உதயநிதி ஸ்டாலினை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை. விசாரணைக்காகவே தஞ்சைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட நீதிபதி, உதயநிதி ஸ்டாலின் இன்றே விடுவிக்கப்பட வேண்டும். விசாரணையை நாளை வரை கொண்டு செல்ல கூடாது. அதேபோல் உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனிடையே உதயநிதி ஸ்டாலினின் கைதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை எனப் பல்வேறு இடங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பல இடங்களில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுத் தேவையில்லாத சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவானது.
மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சை பேச்சுக்கு எதிராக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், சமூக வலைதள பிரபலங்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், இன்றே காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து விடுகிறோம் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக தஞ்சை அழைத்து செல்லப்பட்டார்.
அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த உள்ள தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திற்கு அருகே உள்ள 4 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று மதியம் 1 மணியுடன் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் திமுகவினர் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் உதயநிதி செங்கிப்பட்டி அழைத்து செல்லப்பட்டார். ஆனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் உதயநிதி வர மறுப்பு தெரிவித்தார். மேலும் என் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு போடப்பட்டுள்ளதால் அங்கு தான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபின், செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஒப்புக்கொண்டார்.
உதயநிதியை போலீசார் செங்கிப்பட்டி காவல் நிலையம் அழைத்து வருவதற்கு முன்பு திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான தொண்டர்கள் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் குவிந்தனர்.
விசாரணைக்காக காவல் வாகனத்தில் இருந்து இறங்கிய உதயநிதி, அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே கையசைத்தார். தொடர்ந்து விசாரணைக்காக காவல்நிலையம் உள்ளே சென்றுள்ளார்.
தஞ்சை காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் ஆய்வாளர் மணிகண்டம் உதயநிதியிடம் விசாரனை நடத்தினார்.
காலை 11 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதியிடம் மாலை 6.45 முதல் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற விசாரணை தற்போது நிறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விசாரணை முடிவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
விசாரணையை இன்றே முடித்து உதயநிதியை விடுவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.