

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தவெக கட்சி ஆட்சி அமைத்துள்ள நிலையில் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி 19 மற்றும் 22ம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து இந்த விவாதத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற அதிமுக தலைவர் இ பி எஸ், பாமகவின் சௌமியா அன்புமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பேசியது மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்ட சபையின் நிறைவு நாளான இன்று இதுவரை சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசினார் .
அப்போது அவர் "தவெகவை தேர்ந்தெடுத்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்கள் சேவையில் ஒன்றிணைந்து பயணித்தால் தமிழக முதல் இடத்தில் இருக்கும் .
ஷூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து முதலமைச்சரானது போன்று சிலர் இமேஜ் கிரியேட் பண்றாங்க .அது வெறும் ரீல் தான்; ரியல் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு சாதாரண நடிகராக எனது கெரியர் தொடங்கி, கடினமாக உழைத்து தான் மேலே வந்தேன். நான் மேலே வந்ததற்கு நானும் என் உழைப்பும் மட்டுமே காரணமல்ல; ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பும் அரவணைப்பும் தான் காரணம். ஒவ்வொவரும் அவர்கள் வீட்டில் நம்மை ஒருவராக ஏற்றுக்கொண்டனர்.
எதிர்த்துப் பேசினால் தான் எதிர்க்கட்சி என நிரூபிக்க முடியும் என நினைத்துக் கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும் " என்று கூறி மேலும் ஆட்சிக்கு இருக்கக்கூடிய சவால்கள் ஏற்கனவே நிகழ்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் மின்வெட்டு ஒன்றிய அரசு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பேசினார்.
அத்துடன் பிரச்சார மேடையில் பேசியதைப் போலவே சட்டப்பேரவைத் தலைவரிடம் ஒரு குட்டிக்கதைக் கூறுவதற்கு முதல்வர் அனுமதி கேட்ட பின் சட்டசபையிலும் குட்டிக்கதை ஒன்று சொன்னது தற்போது பேசப்படுகிறது.
அதில், ”ஒரு ஊருல பெரியவர் ஒருவர் வெய்யில் அதிகமாக இருப்பதாக நினைத்து கண்ணிற்கு மேல் கைவைத்து சுற்றி சுற்றி தேடிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த சிறுவன் ஒருவன், என்ன தேடுறீங்க என்று கேட்க, அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பாருனு சொன்னாங்க.... அவரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்க அப்பாவைக் காணோம்” என்று கூறி முடித்தார்.
மேலும் அவர் “எங்களுக்கும் நக்கல், நையாண்டியாக பேசத் தெரியும், சம்பந்தமில்லாத குட்டிக்கதையை எங்களுக்கும் பேசத் தெரியும். அந்தக் கதையில் பெரியவர் அப்படி கூறினார். யாரும் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம், அதனால் யாரும் இங்கு டென்ஷன் ஆக வேண்டாம். பேசு பேசு என்கின்றனர்.இதுபோன்று சம்பந்தமே இல்லாமல் என்னாலும் பேச முடியும்” என்று கதையை முடித்தார் முதலமைச்சர்.
நான் வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டுவிட்டது" என்றதுடன் முன்னாள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மிகவும் டிரண்டான சைகையை சட்டப்பேரவையில் செய்து காட்டி அவையினரிடையே கலகலப்பை ஏற்படுத்தினார்.
மேலும் முதல்வர் விஜய் பேசுகையில், டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளையடித்தாகப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் முதல்வரின் உரைக்கு பதிலடி தரும் விதமாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, Actor Vijay என்பதை மறந்து, இனியாவது
Chief Minister of Tamil Nadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
சட்டசபையை சினிமா தியேட்டர்கள் மாற்றியுள்ளார்கள். சட்டசபையில் முதல்வர் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
இப்படி பல சுவாரஸ்யங்களோடு சட்டசபைக் கூட்டம் முதல்வரின் ரசிகர்கள் தொண்டர்களுக்கும் எதிர்கட்சியினருக்கும் பலவித விமர்சனங்கள் கருத்துகளை வைரலாகும் விதத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.