

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியில் படுதோல்வியை சந்தித்து இருக்கிறார். திமுகவை சேர்ந்த பல முக்கியமான தலைவர்களான, துரைமுருகன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் உள்ளிட்ட பல தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். கொளத்தூரில் போட்டியிட்ட வி.எஸ். பாபு, ஸ்டாலினை சுமார் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். வி.எஸ். பாபு 82,997 வாக்குகளையும், ஸ்டாலின் 74,202 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 2011 முதல் கொளத்தூர் தொகுதியைத் தக்கவைத்து வந்த ஸ்டாலின், தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
தற்போது வரை 107 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றுள்ள நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில், மதியம் வரை அதிமுக, திமுக இவை இரண்டில் எது 2-ம் இடம் பிடிக்கும் என்ற போட்டி நிலவியதில், 74 தொகுதிகள் முன்னிலை பெற்று 2-வது இடத்தை திமுக கூட்டணி பிடித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணி இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் நிலையில், சட்டசபையில் பலமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது திமுக தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே, துணை முதல்-அமைச்சராக அவர் இருந்துள்ளதால், விஜயை எதிர்க்க உதயநிதியே சரியான ஆளாக இருப்பார் என்று திமுக தலைமை கருதுகிறது. என்றாலும், கட்சியின் தலைவரே தோல்வி அடைந்துள்ளார் என்பதை திமுக தலைமை வருத்தத்தில் இருக்கிறது. ஏனெனில் ஒரு முதலமைச்சரே தேர்தலில் தோற்பது தமிழக அரசியலில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
என்றாலும், தோல்வியடைந்த மு.க. ஸ்டாலின் மீண்டும் சட்டசபைக்குள் நுழைய ஒரே ஒரு வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தவெக தலைவர் 2 பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி என இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியை விஜய் விட்டுத்தர வேண்டும்.
அதன்படி திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறும். அதில் வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டி வாய்ப்புள்ளது.