.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
வினாத்தாள் குளறுபடி காரணமாக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு என தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி ஆங்கிலம், வணிகவியல் பாடத்திற்கான மறுதேர்வும், செப்டம்பர் 10ஆம் தேதி சமூகவியல் பாடத்திற்கான மறுதேர்வும் நடைபெற உள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை ஜூன் மாதம் நடத்திய யுஜிசி நெட் (UGC NET) தேர்வில் நடந்த குளறுபடிகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் வினாத்தாள்களில் தவறுகள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மூன்று பாடங்களுக்கு மீண்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை அமைத்த நிபுணர் குழுவின் ஆய்வில், வினாத்தாள்களில் எழுத்துப் பிழைகள், தவறான மொழிபெயர்ப்பு குளறுபடிகள் மற்றும் பிழைகள் காரணமாக ஆங்கிலம், வணிகவியல் (Commerce) மற்றும் சமூகவியல் (Sociology) ஆகிய மூன்று பாடங்களுக்கான யுஜிசி நெட் (UGC NET) மறுதேர்வை தேசியத் தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த மறுதேர்வுகள் நடைபெற உள்ளன.
குளறுபடிக்கான காரணங்கள்:
வினாத்தாள்களில் அறிஞர்களின் பெயர்கள் மற்றும் புத்தகங்களின் தலைப்புகள் தவறாக அச்சிடப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் இலக்கணப் பிழைகள் மற்றும் முந்தைய ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகள் அதிக அளவில் அப்படியே மீண்டும் இடம்பெற்றிருந்ததும் உறுதி செய்யப்பட்டது. கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் மற்றும் எண்களில் குளறுபடி, தெளிவில்லாத விடைகள் மற்றும் ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டது போன்ற தவறுகள் இருப்பதால் சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு மதிப்பெண் வழங்குவது சாத்தியம் இல்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மாணவர்களிடம் இருந்து வந்த புகார்களை அடுத்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மறுதேர்வு நடத்த பரிந்துரைத்தது.
மறுதேர்வு ஆன்லைன் முறையில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆங்கிலம் செப்டம்பர் 9ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், வணிகவியல் செப்டம்பர் 9 பிற்பகல் 3 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும், சமூகவியல் செப்டம்பர் 10 காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
இந்த மறுதேர்வை எழுத விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு கூடுதல் தேர்வுக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. அதாவது மறுதேர்வு எழுதும் மாணவர்களிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. மீதமுள்ள 84 பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் விடைக்குறிப்புகள் (Provisional Answer Keys) வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும், இதில் எந்தவிதத் தாமதமும் இருக்காது என்று கூறப்படுகிறது. மாணவர்கள் விடைக்குறிப்பு தொடர்பான தங்களின் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 18 அன்று இரவு 11:59 மணி வரை பதிவு செய்யலாம் என்றும், ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூபாய் 200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மறுதேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் மற்றும் அட்மிட் கார்டு (Admit Card) விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனியாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் ஹால் டிக்கெட் விவரங்களை அறிவதற்கு National Testing Agency (NTA) அல்லது UGC-NET Official Website தளத்தைப் பார்வையிடலாம்.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் இளநிலை ஆய்வு உதவித்தொகை பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கவும், பி.ஹெச்.டி சேர்க்கைக்கான தகுதியை உறுதிப்படுத்தவும் யுஜிசி நெட் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.