

முதல்வர் விஜய் மேற்கொண்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் (14.9.2026) அன்று சில முதலீடு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் அதன் ஐரோப்பா கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, தனது வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இதற்காக , இந்த நிறுவனத்தில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகள் உருவாக்கப்பட உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குநர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குநர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும் கையெழுத்திட்டனர். இந்த நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளது.
சிக்மா டெக்னாலஜி குருப் என்னும் ஸ்வீடனைச் சேர்ந்த நிறுவனம் , சென்னை மற்றும் திருச்சியில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் , தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா கையெழுத்திட்டனர்.
இங்கிலாந்தை சேர்ந்த சர்வதேச முன்னணி தகவல் தொடர்பு நிறுவனம், தமிழ்நாட்டில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில்,மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'ஜிசிசி காரிடார்' பகுதியில் உலகளாவிய திறன் மையத்தை அமைக்க உள்ளது. இதற்காக தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் மற்றும் ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. இந்த திறன் மையத்தின் மூலம் 2000 -க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
மேலும் லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த , அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் திருமதி ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்திந்தனர்.
2026 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட 2500 கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து உரையாடினார்கள். தமிழகத்தில் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதில் இந்த நிறுவனம் ஆர்வமாக உள்ளது.மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தங்கள் நிறுவன வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.