

பெற்றோரை பராமரிக்கா விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இதோ உத்திரபிரதேசம் வழியில் இனி அனைத்து மாநிலங்களிலும் சட்டம் கொண்டு வந்தால் வயதான பெற்றோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பிள்ளைகளுக்கு எச்சரிக்கை தரும் இந்த தகவல் அனைவருக்கும் விழிப்புணர்வைத் தரும் என்பது மட்டும் நிச்சயம்.
பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளை தங்களது சொத்தில் இருந்து பெற்றோர் வெளியேற்ற வழிவகை செய்யும் புதிய சட்ட திருத்தத்திற்கு உ.பி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பிள்ளைகளால் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படும் நிலையை அறிந்து வாரிசுரிமை மறுப்பு மீதான விதிகளை உத்தரப் பிரதேச அமைச்சரவை வலுப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கூடிய உத்தரப் பிரதேச அமைச்சரவையில் உத்தரப் பிரதேச பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகள், 2014-ஐ வலுப்படுத்தும் ஒரு திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்தீர்வின்படி, பிள்ளைகள் முறையாக பராமரிக்கப்படாவிட்டாலோ அல்லது அவர்களால் எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டாலோ, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொத்துரிமையிலிருந்து நீக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்படுவதாக கூறுகிறது.
'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளின் கீழ் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules-2014)' புதிய விதிகள் (22A, 22B, 22C) சேர்க்கப்பட்டுள்ளதே சட்டத் திருத்தத்தின் விபரம். மேலும் முதியவர்களின் புகார்கள் மீதான விசாரணை மற்றும் தீர்வு நடவடிக்கைகள் 30 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்ற உறுதியும் அளிக்கும் வகையில் சட்டம் உள்ளது. மேலும் வயதான பெற்றோர்கள் எளிதில் புகார் அளிக்க பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் (Toll-free number) விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"திருத்தப்பட்ட விதிகளின் கீழ், வாரிசுரிமை மறுப்பு நடைமுறை காலவரையறைக்கு உட்பட்டதாகவும், மேலும் தெளிவுபடுத்தப்பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளது" எனவும் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா சட்டப்பேரவையில் இது குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும் மூத்த குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில் கூடுதல் விதிகளைச் சேர்த்து விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.
குறிப்பாக மூத்த குடிமக்களின் புகார்கள் 30 நாட்களுக்குள் விசாரிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்கின்றனர். மேலும் புதிய விதிமுறைகளின்படி, இதுபோன்ற வழக்குகளில் மாவட்ட ஆட்சியரிடம் புகார்களை அளிக்கலாம். மாவட்ட ஆட்சியர் (DM) இப்படி பெறப்படும் அனைத்து வழக்குகள் தொடர்பான மாதாந்திர அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெற்றோரை பராமரிக்கத் தவறும் அல்லது அவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் பிள்ளைகளைத் தங்களது சொத்திலிருந்து வெளியேற்ற உத்தரவிடும் புதிய சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையின் இந்த நடவடிக்கை குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ளவும் அவர்களை மதிக்கவும் ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொதுவாகவே பெற்றோர் உயிருடன் இருக்கும்போது, அவர்களுடைய சொத்தை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை பெரும்பாலும் அவர்களே தீர்மானிக்க முடியும். உயில் (Will), தானம் போன்ற சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் ஒருவரை வாரிசாக சேர்க்காமல் இருக்க முடியும் என்பதால் பராமரிக்க தவறும் பிள்ளைகள் சொத்தின் மீது உரிமை கோர முடியாது.
அதே சமயம் ஏற்கெனவே சொத்தை பிள்ளைக்கு கொடுத்துவிட்டு, அந்தப் பிள்ளை பராமரிக்கவில்லை என்றால் சட்ட பாதுகாப்பு பெற முடியும். ஆம் பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007 (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 ) பிரிவு 23-ன் கீழ், சில நிபந்தனைகளில் அந்த சொத்து மாற்றத்தை ரத்து செய்யக் கோர முடியும் என தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்துக்கான Tamil Nadu Maintenance and Welfare of Parents and Senior Citizens Rules, 2009 அமலில் உள்ளதாக கூறப்படுகிறது.
2025–26-ல் முக்கியமான தமிழ்நாடு நீதிமன்றங்களில் இது குறித்து வந்த வழக்குகளில், சொத்தை மாற்றியபோது பெற்றோரை பராமரிக்கும் நிபந்தனை இருந்ததா என்பது முக்கியமானதாக நீதிமன்றங்கள் பார்த்துள்ளன. சில வழக்குகளில் அந்த நிபந்தனை வெளிப்படையாக ஆவணத்தில் எழுதப்படாவிட்டாலும் சூழ்நிலைகளைப் பார்த்து பரிசீலிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆனால் பெற்றோரை கவனிக்காததால் மட்டும் ஒரு பிள்ளையின் சொத்துரிமை தானாக ரத்து ஆகாது என்பதையும் கவனிக்க வேண்டும். ஆனால் பெற்றோர் தங்களுடைய சொத்தை எப்படி வைத்திருக்கிறார்கள்/மாற்றுகிறார்கள் என்பதன் அடிப்படையில் மட்டுமே சொத்தின் நிலை மாறும்.
இனி பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு உபியின் இந்த சட்டத்திருத்தம் சொத்து மீதான கவனத்தை தந்து பெற்றோரிடம் அக்கறை செலுத்த வைக்கும்.