

ஸ்பெயின் உடனான அனைத்து விதமான வர்த்தகத்தையும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஸ்பெயினில் உள்ள முக்கியமான ராணுவ தளங்களில் அமெரிக்காவை அணுக விடாமல் தடுப்பதாகவும் அதனால் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் ஸ்காட் பெசென்டிடம் அனைத்து நிதி மற்றும் வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா நட்பு நாடுகளுடைய ராணுவத் தளங்களை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால் ஸ்பெயின் தங்களுடைய விமானபடைத் தளங்களை பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளது.
அமெரிக்காவும் ஸ்பெயினும் 'நேட்டோ' கூட்டமைப்பில் உள்ள நாடுகள் என்பதால், அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரான் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இந்தப் போர் விமானங்களைக் கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. ஆனால் ரோட்டா(Rota) மற்றும் மோரான்(Moron) விமானப்படை தளங்களை அமெரிக்கா பயன்படுத்த ஸ்பெயின் அரசு அனுமதி அளிக்கவில்லை. ஈரான் மீது நடைபெற்று வரும் போரில் தங்களுடைய விமானப்படைத் தளங்களை பயன்படுத்தி எந்தவொரு நேரடி தாக்குதல்களையும் நடத்த அனுமதிக்க முடியாது என்று ஸ்பெயின் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அத்துடன் சர்வதேச சட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு உட்பட்டே தங்கள் எல்லைக்குள் எந்தவொரு ராணுவ நடவடிக்கைகளும் இருக்கும் என்பதிலும் ஸ்பெயின் மிகவும் உறுதியாக உள்ளது.
இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றது. ஸ்பெயினின் இந்த திட்டவட்டமான அறிவிப்பால் அமெரிக்கா மிகவும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளது. இதனால் ஸ்பெயின் உடனான அனைத்து விதமான வர்த்தக உறவுகளையும் துண்டிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஸ்பெயினில் உள்ள முக்கியமான ராணுவ தளங்களில் அமெரிக்காவை அணுக விடாமல் தடுப்பதாக குற்றம் சாட்டியதுடன், தான் அமெரிக்காவின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட்டிடம், ஸ்பெயின் உடனான அனைத்து நிதி மற்றும் வர்த்தக உறவுகளை குறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.