விவசாயிகள் பயன்பெற உழவன் செயலி!

உழவன் செயலி
உழவன் செயலி
Updated on

விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் "உழவன்" கைபேசி செயலி மூலம் பெறலாம் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்ததாவது:

வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்களை கைபேசி மூலம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி.

பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள். விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களை இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2018 ஏப்ரல் மாதத்தில் 9 முக்கிய சேவைகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலி, இப்போது மேம்படுத்தப்பட்டு தற்போது 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது. இச்செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, சுமார் 12.70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

சேவைகள் மானியத் திட்டங்கள்: வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள், பயிர் காப்பீட்டு திட்டங்கள்  பற்றிய தகவல்களை அறியலாம். வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.

தினசரி வானிலை முன்னறிவிப்பும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 -இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com