தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் உள்ள 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும், அதற்கான எழுத்துத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் கணிசமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பயணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படுவதை அரசு உணர்ந்துள்ளது.
தற்போதுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்த காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தகுதியான நபர்களை வெளிப்படையான முறையில் தேர்வு செய்து, விரைந்து பணியமர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் போக்குவரத்து சேவையை மேலும் மேம்படுத்த முடியும்.
புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வது மற்றும் பழைய பேருந்துகளை புனரமைப்பது போன்ற பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக சுமார் 4,800 புதிய பேருகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனால், போக்குவரத்து துறையில் 680 புதிய பணியாளர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ட்ரைவர், கண்டெக்டர் போன்ற பணிகள் உட்பட 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணியமர்த்தப்படுவார்கள். மக்களின் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதே அரசின் முதன்மையான நோக்கம்.
பொதுமக்கள் போக்குவரத்து துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதன்மூலம் போக்குவரத்துத் துறை சீரமைக்கப்படுவதுடன், கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது." என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டால், போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் மேம்பட்டு, பயணிகளுக்கு சிறந்த சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.