

‘ஆளே இல்லாத கட்சிக்கு 8 சீட்டா?’ என விசிக மற்றும் தேமுதிகவிற்கு திமுக அளித்த தொகுதிகள் குறித்து வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். திமுக கூட்டணியில் தமக்கு ஏற்பட்ட இந்த அதிருப்தி மற்றும் அவமதிப்பு குறித்து, வைகோ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
திமுகவின் முக்கியக் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவும் இப்போது அக்கட்சியை விமர்சிக்கும் பட்டியலில் இணைந்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், அதனால் தங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது மதிமுகவுக்கு வேறு வழிகள் இல்லை என்று கூறிய வைகோ, ‘தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் சின்னம் ஆகிய இரண்டிலும் அவர்கள் எங்களை நிர்பந்தித்தனர்.
ஆரம்பத்தில், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஒரு தொகுதியிலாவது எங்கள் சொந்தச் சின்னத்தில் போட்டியிட நாங்கள் விரும்பினோம், ஆனால் இறுதிக்கட்டத்தில் நான்காவது தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தங்களைக் கட்டாயப்படுத்தியாக அவர் கூறினார்.
மதிமுகவின் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக கட்டாயப்படுத்தியதாகவும், இது கட்சியின் சுதந்திரமான அடையாளத்தைக் குறைத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் தொடர்வதா வேண்டாமா என்பதை நாளை (ஜூன் 27-ம்தேதி) நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவர் கலந்து கொள்ளும் பல நிகழ்ச்சிகளில் திமுக கூட்டணி குறித்து பேசி வரும் மிகக்கடுமையான விமர்சன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே அருப்புகோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய வைகோ, நாங்கள் நீண்ட காலமாக திமுகவில் பயணித்து திமுகவின் தலைமையை உயரப்பிடித்தோம். இருந்தபோதிலும் எங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கிளைகள் கூட இல்லாத கட்சிக்கு 8 சீட்டுகள், காணாமல் போக இருந்த கட்சிக்கு 10 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்தது என விடுதலைச்சிறுத்தைகள் கட்சியையும், தேமுதிக கட்சியையும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்கிய திமுக, தங்கள் கட்சிக்கு (மதிமுக) குறைவான இடங்களை (நான்கு இடங்கள்) மட்டுமே வழங்கியதாகவும், இது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் ஆதங்கப்பட்டுள்ளார்.
அதாவது ஒரு பெரிய தேசியக் கட்சிக்கு 28 இடங்களும், தேமுதிகவிற்கு 10 இடங்களும், விசிகவிற்கு 8 இடங்களும் வழங்கிய திமுக, தங்களைப்போன்ற நீண்டகாலக் கூட்டணிக் கட்சிக்கு வெறும் 4 இடங்களை மட்டுமே ஒதுக்கியது சுயமரியாதைக்கு இழுக்கானது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
தன்னைப்போல் திமுகவை உயர்த்தி பிடித்தவர்கள் யாருமில்லை என குறிப்பிட்ட அவர், சுயமரியாதையையும், தன்மானத்தையும் இழந்து தான் திமுக கூட்டணியில் பயணித்தோம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
எனக்கு பணத்தாசை கொஞ்சம் கூட கிடையாது. நமது கட்சிக்கான சோதனை காலம் முடிந்துவிட்டது. பனிகாலம் முடிந்து வசந்த காலம் வரப்போகிறது. 9 ஆண்டு கூட்டணியில் அங்கீகாரம் இல்லை. தொண்டர்களின் காயங்களுக்கு மருந்திடுவோம். தன்மானத்தையும், சுயமரியாதையும் காப்பாற்ற பொதுக்குழுவில் நல்ல முடிவு உள்ளோம் எனப் பேசியுள்ளார்.
திமுக மீது வைகோ வைத்துள்ள இந்த திடீர் விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக திமுகவில் இருந்த கூட்டணி கட்சிகளையும், திமுகவையும் மிகக்கடுமையாக மறைமுகமாக விமர்சித்து இருப்பதன் மூலமாக வைகோ அந்த கூட்டணியில் இருந்து விலகப்போவது உறுதி என்பது அவரது பேச்சின் மூலம் தெரியவருகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வைகோ அவரது மகன் துரை வைகோ இருவரும் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர்.
விசிக (VCK), ஐயுஎம்எல் (IUML) மற்றும் இடதுசாரி கட்சிகள் டிவிகே அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஒருவேளை மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற முடிவு செய்தால், திமுகவின் முக்கியக் கூட்டணிக் கட்சியாக டிஎம்டிகே (DMDK) மட்டுமே எஞ்சியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.