

திமுக கூட்டணியில் சீர்காழி தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், சீர்காழி தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். ஆனால் இப்போது ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி சீர்காழி தொகுதியிலும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் என்பவர் உதயசூரியன் சின்னத்தில் தான் களம் காண்பார் என்ற அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம் மதிமுக போட்டியிடக்கூடிய 4 இடங்களிலுமே திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிடப் போகிறார்கள். இதனால் உதயசூரியன் சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் ஒரு சின்னம் ஒதுக்கக் கேட்டிருந்தும், சின்னம் ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதால் இந்த புது முடிவு எடுத்துள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.