

கோவை வடக்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், எனக்காக இறைவனிடம் மனமுருக வேண்டிக் கொண்டதற்கும் மனமார்ந்த நன்றி இந்த தருணத்தில் என்னுடன் நின்ற அனைத்து அண்ணன்களுக்கும், அக்காக்களுக்கும், தம்பி தங்கைகளுக்கும் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் என் மனதில் பதிந்திருக்கிறது.உங்கள் பிரார்த்தனையே என் வலிமை.. உங்கள் நம்பிக்கையே என் மருந்து.. விரைவில் குணமடைந்து உங்களிடையே வருவேன் மீண்டும் சந்திப்போம், வெற்றி கொண்டாடுவோம்! இந்த தேர்தலில் நம் வெற்றி நிச்சயம் வெற்றி நமதே! ' என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது, ''வணக்கம் அன்பு சகோதர சகோதரிகளே உங்களுடைய அன்பினாலும் பிரார்த்தனையாலும் விரைவாக உடல் நலம் தேறிக் கொண்டிருக்கிறேன். ஓர் இரண்டு நாட்களில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன். என்னுடைய தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். எனக்காக கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தீவிரமாக பணியில் ஈடுபட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும், கூட்டணி கட்சியினுடைய நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.
இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி பாஜகவின் பூத் காரிய கர்த்தாக்களுடன் கலந்துரையாட இருக்கிறார். 'எனது பூத் வலிமையான பூத்' என்கின்ற கலந்துரையாடலில் நாம் அனைவரும் 'நமோ' செயலி மூலம் இணைந்து அவருடன் பேசுவதும், அவர் பேசுவதை கேட்பதுமாக இந்த நிகழ்வை வெற்றிகரமாக மாற்ற வேண்டும். தமிழகத்தின் மீது அளப்பரிய அன்பும் தமிழகத்தினுடைய ஆற்றல் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கின்ற பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிடைய வெற்றியின் மூலமாக நமது அன்பினை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இன்று மாலை 4 மணிக்கு நாம் அனைவரும் மோடி பேசுவதை கேட்க காத்திருக்கிறோம். நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.