

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் 6ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இன்னும் முடிவாகாத நிலையில் 234 தொகுதிகளுக்குமே விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல் நாளே பத்தாயிரம் விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஆன்லைன் வழியாக வாங்கிக் கொள்ளலாம் என்று தலைமை அறிவித்தது.
50,000 பேர் விருப்ப மனுக்களை விண்ணப்பக் கட்டணமாக 100 ரூபாய் செலுத்தி வாங்கினர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் பொழுது பொதுப் பிரிவினர் 10,000மும், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினர் 5000 கட்டணமும் செலுத்த வேண்டும் என்றிருந்தது. ஆனால் 2 நாட்களே உள்ள நிலையில் தவெக அலுவலகத்திற்கு வெறும் 5,000 மனுக்களே திரும்பி வந்துள்ளன. 20ஆம் தேதிக்குள் விருப்ப மனுக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு உயருமா? கட்சித் தலைமை காரணம் புரியாமல் அதிர்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வருகிற 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் 33 ஏக்கரில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் அணைக்கட்டு தாலுகா அகரம்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கும் படி சில நாட்களுக்கு முன்பு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலான நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதனை பரிசீலித்த போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் அவர்கள் நிகழ்ச்சிக்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்குவது தொடர்பாக 20 நிபந்தனைகள் அடங்கிய விண்ணப்பத்தை நேற்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகனிடம் வழங்கி அதனை பூர்த்தி செய்து வழங்கும் படி கூறினார்.
இது தொடர்பாக வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில் வருகிற 23ஆம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் விஜய் பங்கேற்கிறார். காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை 100% கடைபிடித்து பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அனைவருக்கும் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதி, வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றார். நிகழ்ச்சிக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் வர வேண்டாம் என்றும் தெரிவித்தார். அத்துடன் விஜய் சென்னையிலிருந்து வேலூருக்கு காரில் வரும் பொழுது யாரும் வாகனத்தில் அவரை பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.