.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
பெரம்பூர் தொகுதியில் நாளை மறுநாள் மதியம் 12 மணிக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார் தவெக தலைவர் விஜய். வேட்பு மனு தாக்கல் செய்த கையுடன் பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் மார்ச் 29ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் அறிவிக்க உள்ளார். முதல் தேர்தலிலேயே கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளது தவெக.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் பரப்புரை நடத்துவதற்காக காவல்துறையினரிடம் 26 ஆம் தேதி அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தில் அவர் தன்னுடைய பிரசாரத்தை பேஸின் பாலம் பகுதியில் இருந்து தொடங்கி முல்லை நகர் சந்திப்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பின்பு அம்பேத்கர் கல்லூரி முதல் சர்மா நகர் வரை சாலை வழியாக பயணித்து கடைசியாக வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முல்லை நகர் சந்திப்பில் நடைபெறப்போகும் கூட்டத்தில் சுமார் 3000 பேர் பங்கேற்பார்கள் என்றும், 20 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் முல்லை நகர் சிறிய பகுதி என்பதால் பரப்புரை நடத்த ஏற்றதல்ல என்று கூறி காவல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் வேறு இடத்தை தேர்வு செய்யவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் நாளை(29ஆம் தேதி) 234 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை விஜய் இரண்டு கட்டங்களாக அறிவிக்க உள்ளார் என்றும், அதைத் தொடர்ந்து 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனுத்தாக்கல் செய்த கையுடன் பரப்புரையை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.