தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஒரு நடிகர் மற்றும் அரசியல் பிரபலம் என்றால் அது விஜயகாந்த் தான். ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகர் விஜயகாந்த் பல வருடங்களாகவே உடல் நிலை மோசமாகி வீட்டிலேயே முடங்கியுள்ளார். ஆண்டுதோறும் அவரின் பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பார்.
இந்த நிலையில், மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு இந்த மாதம் 12ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களை சந்தித்து கையசைத்தார்.
இந்நிலையில், அவர் மீண்டும் நேற்று மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வழக்கமான சிகிச்சை தான் என்றும், 3 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் எனவும் தேமுதிக விளக்கமளித்திருந்தது. இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனால் மியாட் மருத்துவமனை வாசலில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பார்த்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.