

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் தவெக தலைவர் விஜய் அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. இந்நிலையில் தமிழ்நாட்டில் தவெக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பனையூரில் தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை சென்னையில் தங்க வைப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். சென்னையில் வீடு இருப்பவர்கள் அங்கு தங்கிக் கொள்ளலாம் என்றும், வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்டு, வெற்றி பெற்று சென்னை வந்துள்ள தவெக எம்எல்ஏக்களை சென்னையிலேயே ஈசிஆர்-ரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டு, பின்னர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சென்னை வந்துள்ள தவெக எம்எல்ஏக்களை மாமல்லபுரம் (இசிஆர்) அருகிலுள்ள ஃ போர் பாயிண்ட் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் தங்க வைக்க தவெக திட்டமிட்டுள்ளது. கூட்டணி ஆட்சி அமைய தாமதமாகலாம் என்பதால் தமிழக வெற்றிக்கழகம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி அமைக்கும் வரை வேட்பாளர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், "குதிரைபேரம்" போன்றவற்றை தவிர்ப்பதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.