

பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் 2-ம் கட்டமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுவதையொட்டி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி(SIR) கடந்த மாதம் 4-ம்தேதி தொடங்கியது.இந்த பணி தொடங்கியதில் இருந்தே அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இருந்த போதிலும் தமிழகத்தில் SIR பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்,7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு உள்ளனர்.
மிக முக்கியமாக கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி மற்றும் அதனை திரும்ப பெறும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பதிலாக அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகள் தான் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் பூர்த்தி செய்ய கணக்கெடுப்பு படிவங்களை அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகள் தான் ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதாவது, அந்த படிவங்களில் உள்ள ஆதார்-செல்போன் எண்கள் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகள் வசம் சென்று விடும் என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
SIR பணியில் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகள் அதிகளவில் ஈடுபடுவதன் மூலம் ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை எவ்வளவு, அவர்களின் செல்போன் எண்கள் என்ன என்பதனை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வாரி இரைத்து விட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சில இடங்களில் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகள் படிவத்தில் உள்ள நம்பருக்கு போன் செய்து, உங்களது கணக்கெடுப்பு படிவத்தில் சில தகவல்கள் வேண்டும் என்று கேட்கின்றனர். பூத் அலுவலராக இல்லாதவர்கள் இதுபோன்ற விவரங்களைக் கேட்பதால், வாக்காளர்கள் அச்சமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த செல்போன் எண்களை பெற்ற ஏஜெண்டுகள் பிரசார மெசஜ்களை அனுப்பி தொந்தரவு செய்வர்கள் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் செல்போன் எண்களை தவறான நோக்கத்தோடு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.