

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தீவிர கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுகவை பொறுத்தவரை, 21 கட்சிகளுடன் பலமான கூட்டணியை அமைத்துள்ளது. அதிமுகவும் கிட்டத்தட்ட கூட்டணியை இறுதி செய்துள்ளது.
இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் தவெகவை இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை.. வதந்திகளை நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:
சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.
இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன.
பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்!
வாய்மையே வெல்லும்!
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.