

தமிழகத்தில் சொத்து தொடர்பான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் உங்கள் சொத்தை ஏமாற்றி போலி பத்திரம் தயார் செய்திருந்தால் என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்ளலாம் வாங்க...
இன்றைய காலத்தில், சொத்து தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உரிமையில்லாத நபர் மூலம், போலி ஆவணங்கள் பயன்படுத்தி, அல்லது உண்மையை மறைத்து சொத்து பத்திரம் பதிவு செய்யப்படும் சம்பவங்கள் பல நேரங்களில் நடைபெறுகின்றன.
பெரும்பாலும் போலி ஆவணங்கள், போலியான நபர், கையெழுத்து, புகைப்படம் அல்லது இவையெல்லாம் போலியாக செய்யப்பட்டு அழித்து திருத்தி மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சேர்த்தோ அல்லது இவற்றில் ஒன்றோ நடந்து இருக்கும். ஆனால் இவையெல்லாம் 1995க்கு முன் இருக்கின்ற பத்திரங்களில் நடந்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
1995க்கு முன்பு அடையாள அட்டை , சான்று புகைப்படம், சான்று கையெழுத்து என்று எதற்கும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே 2005க்கு பின் பத்திரத்தில் வாங்குபவர், விற்பவர் புகைப்படம் ஒட்டி இருப்பர். ஆனால் சமீபமாக பத்திரபதிவின் போது பதிவு அலுவலகத்தில் டிஜிட்டல் போட்டோ மற்றும் டிஜிட்டல் ரேகை அமுல்படுத்தி இருக்கின்றனர்.
இவ்வாறு சோசடி மூலம் பதிவு செய்யப்பட்ட பத்திரம் சட்டப்படி செல்லாது என்பதே அடிப்படை உண்மை.
போலியான பத்திரத்தை ரத்து செய்வது எப்படி?
உங்கள் பத்திரம் மோசடி மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் பதிவுத்துறை அலுவலகத்தில் புகார் செய்யலாம். ஒருவேளை உங்கள் புகார் பதிவுத்துறை அலுவலகத்தில் நிராகரிக்கப்பட்டால், அல்லது விரைவாக நடவடிக்கை எடுக்க நீங்கள் விரும்பினால், நீதிமன்றத்தை அணுகலாம்.
"போலிப் பத்திரத்தை ரத்து செய்யக் கோரி" என்று ஒரு சிவில் வழக்கை நீங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணை நடத்தி, பத்திரம் போலியானது என்று கண்டறிந்தால் அதை ரத்து செய்ய உத்தரவிடும்.
மோசடி மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்டிருப்பது உங்களுக்கு தெரிய வந்த நாளிலிருந்து தான் சட்ட காலவரம்பு (Limitation) தொடங்குகிறது. பத்திரம் பதிவு செய்யப்பட்ட தேதி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இந்த அம்சத்தை அறியாமையால் பலர் தங்கள் உரிமையை இழக்கின்றனர்.
பத்திரம் போலி என்று தெரியவந்த நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் சிவில் வழக்கு தொடர வேண்டும். அப்போது தான் இந்த வழக்கின் மூலம், போலி பத்திரத்தை ரத்து செய்வதற்கும், சொத்து உரிமையை நீங்கள் மீட்பதற்கும் சட்ட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில், குறிப்பாக சொத்து கைப்பற்றல் மற்றும் உரிமைத் தகராறுகளில், 12 ஆண்டுகள் வரை சொத்து மீட்பு வழக்கு செல்லும் வாய்ப்பும் சட்டத்தில் உள்ளது.
மோசடி, போலி பத்திரம், போலி ஆவணம் உருவாக்கல் போன்ற குற்றங்களுக்கு எந்த Limitation காலவரம்பும் இல்லை. அதனால், எத்தனை ஆண்டுகள் கடந்திருந்தாலும், எந்த நேரத்திலும் FIR பதிவு செய்யலாம்.
காலம் கடந்துவிட்டது என்பதைக் காரணமாகக் கொண்டு காவல் நிலையம் புகாரை நிராகரிக்க முடியாது. Fraud நடந்த நாள் முக்கியமல்ல; மோசடி பத்திர பதிவு உங்களுக்கு தெரிய வந்த நாளே சட்டக் கணக்கின் தொடக்கம். இதுவே சிவில் வழக்கும் கிரிமினல் புகாரும் தீர்மானிக்கப்படும் முக்கிய விதியாகும்.
மோசடி பத்திர பதிவு குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். சிவில் வழக்கும் கிரிமினல் புகாரும் ஒரே நேரத்தில் தொடர்வது உங்கள் உரிமையை பாதுகாக்க வலுவான வழியாகும். சட்ட அறிவு தான் மோசடிகளுக்கு எதிரான முதல் பாதுகாப்பு.
தற்போது பதிவுத்துறை சட்டப்பிரிவு 77A-ன் படி, மோசடியான பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் மாவட்டப் பதிவாளர்களுக்கு (District Registrar) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நீதிமன்றம் செல்லாமல் விரைவாகத் தீர்வுகாண உதவுகிறது.