

இன்றைய நவீன யுகத்தில் பலரும் விதவிதமான காலணிகளை அணிவது உண்டு. பெருநகரங்களில் பெரும்பாலான மக்கள் ஷூக்கள் அணிவது அதிகரித்து வருகிறது. காலணிகளை அணியும் போது கால் விரல்களுக்கு காற்றோட்டம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது.
ஆனால் ஷூக்களை அணிவதற்கு முன்பு சாக்ஸ்களை பயன்படுத்துவதால், கால் விரல்களுக்கு காற்றோட்டம் கிடைப்பது குறைந்து விடும். இதனால் ஒருவிதமான ஈரப்பதமான நிலை உண்டாகும்.
ஒருசிலருக்கு இது பழகி விட்டாலும், புதிதாக ஷூக்களை அணிபவர்களுக்கு இது அசௌகரியமாகவே இருக்கும். இந்நிலையில் சாக்ஸ்களை அணிவதில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் கால் விரல்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பலரும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வது உண்டு. இந்த சமயத்தில் காலணிகளை காட்டிலும் ஷூக்கள் தான் சரியாக இருக்கும். ஆனால் சுத்தமான ஷூக்கள் மற்றும் சாக்ஸ்களை பயன்படுத்துகிறோமா என்றால், நம்மில் பலரும் சற்று யோசித்து தான் பதில் சொல்வோம்.
நாம் சுத்தமாக இருப்பது மட்டுமின்றி, பயன்படுத்தும் பொருட்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவ்வகையில் சுத்தமான சாக்ஸ்களை பயன்படுத்துவதே உடல்நலத்திற்கு நல்லது எனவும், இல்லையெனில் ஆபத்தை சந்திக்க நேரிடும் எனவும் உலக சுகாதார அமைப்பு (World Health Organization) எச்சரிக்கை விடுத்துள்ளது.
WHO வெளியிட்ட அறிக்கையில், “ஷூக்களை அணியும் போது சுத்தமான சாக்ஸ்களை பயன்படுத்த வேண்டும். துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தவறான செயல். அதேபோல் வியர்வை நிறைந்த சாக்ஸ்களை அணிந்து கொண்டு தொடர் உடற்பயிற்சி செய்வதும் தவறானது. இப்படி செய்வதனால் ‘அத்லட்ஸ் ஃபுட்’ என்ற பூஞ்சைத் தொற்று உருவாகும்.
ஈரப்பதம் உள்ள இடங்களில் இந்தப் பூஞ்சை வளரும் தன்மை கொண்டது. ஆகையால் சாக்ஸ்களை அணியும் போது அதிக வியர்வை வெளியேறும் சமயத்தில், அத்லட்ஸ் ஃபுட் பூஞ்சை உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாக கால் விரல் இடுக்குகளில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் மற்றும் தோல் வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும்” என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நம்மில் பலரும் துவைக்காத சாக்ஸ்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இருப்போம். ஆனால் இனி யாரும் அப்படி செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு ஒரு முறை சாக்ஸ்களை துவைத்து பயன்படுத்துவதே நல்லது. சாதாரணமாக உலக சுகாதார அமைப்பு இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிடுவது கிடையாது.
பெரிய அளவில் பாதிப்புகள் உருவாகும் பட்சத்தில், அதனைத் தடுக்க முன்கூட்டியே இதுபோன்ற எச்சரிக்கையை வெளியிடும்.
தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட இந்த எச்சரிக்கையை யாரும் அலட்சியமாக கடந்து விடாமல், சாக்ஸ்களை பயன்படுத்துவதில் அதிக கவனத்துடன் செயல்படுங்கள்.
சாக்ஸ் மீது நாம் வைக்கும் சிறு கவனம் கூட நம்முடைய கால்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்பதை மறக்க வேண்டாம்.
உங்கள் சாக்ஸ் ஈரமாக இருப்பதை உணர்ந்தால், உடனே மாற்றி விடுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இப்போது இருந்தே அவர்கள் இந்தப் பழக்கத்தைக் கடைபிடிக்கட்டும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.