

தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்ப் புதல்வன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்து அதை சிறப்பாகவும் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் வரும் 2026-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களை கவரும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
திமுக அரசு கடந்த பட்ஜெட்டின்போது, 2 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தரமான லேப்டாப் வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்த நிலையில், இந்த பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் இவர்கள் லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர்.
இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த மாதம்(டிசம்பர்) தொடங்கி வைக்க உள்ள நிலையில் முதல்கட்டமாக வரும் ஏப்ரல் மாதத்திற்குள் 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட் உள்ள ஒவ்வொரு லேப்டாப்பும் 15 அங்குல திரையைக் கொண்டிருக்கும். இன்டெல் ஐ3 அல்லது ஏஎம்டி ரைசன் 3 செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். முன்கூட்டியே நிறுவப்பட்ட மென்பொருளுடன், கல்விக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய கல்வி செயலிகளும் லேப்டாப்பில் நிறுவப்பட்டிருக்கும்.
அதேசமயம், வேர்டு மற்றும் எக்செல் உள்ளிட்ட சமீபத்திய மைக்ரோசாஃப்ட் சாதனங்களை மாணவர்கள் ஒரு வருடத்திற்கு இலவசமாகப் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த வகையில் இலவச லேப்டாப் கல்லூரி மாணவர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
* முதலில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டும், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டும் கொடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
* தமிழ்நாட்டில் உள்ள 30-ம்மேற்பட்ட அரசு பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
* அரசு மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
* அரசு பாலிடெக்னிக் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்கள்.
* 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்
* தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்ட பயனாளிகள்
* தனியார் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் SC/ST மாணவர்கள்
- பிப்ரவரி மாதத்திற்குள் இந்த திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச லேட்டாப் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.