ஐபிஎல் 2026 தொடர் இந்த மாத கடைசியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதற்கு இறுதி கட்ட பாதுகாப்பு ஆய்வை நிபுணர்கள் குழு இன்று மேற்கொண்டு வருகிறது.
கடந்த வருடம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் பொழுது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தார்கள். அதற்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் அவரது குழுவினரின் தொடர் முயற்சியால் மைதானத்தில் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 2026 ஐபிஎல் போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்துவதற்கான இறுதி அனுமதி வழங்குவதற்கு முன்பு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
மைதானத்தில் அமைந்துள்ள கேலரி பாதுகாப்பு மற்றும் வடிகால் அமைப்புகளை தீயணைப்புத்துறை அதிகாரிகள், கட்டமைப்பு பொறியாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் அடங்கிய குழு சோதித்து வருகின்றது. அத்துடன் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நுழைவாயில்கள், அகலப்படுத்தப்பட்ட வெளியேறும் வழிகள் மற்றும் அவசரகால வெளியேற்ற வசதிகள் குறித்தும் ஆய்வுகள் செய்து வருகின்றனர்.
ஆய்வுக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தான் ஐபிஎல் தொடரின் முதல் உள்ளூர் போட்டியை இங்கு நடத்த அனுமதி வழங்கப்படும். அரசு பரிந்துரைத்த அனைத்து பாதுகாப்பு மேம்பாடுகளையும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நிறைவேற்றியுள்ளதால், இன்று நடைபெறும் ஆய்வில் நேர்மறையான முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.