

தங்கம் விலை கடந்த 12-ம்தேதியில் இருந்து குறைந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. அதன்படி தொடர்ந்து 5 நாட்களில் பவுனுக்கு சுமார் ரூ.2880 வரை குறைந்து இருக்கிறது. தங்க விலையின் இந்த சரிவு காரணமாக நகைக்கடைகளில் வாங்குபவர்களின் வருகை அதிகரிப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக திருமண நகைகள் வாங்க திட்டமிட்டு காத்திருந்த குடும்பங்கள் இந்த சரிவை பயன்படுத்தி தங்கம் வாங்க முனைவார்கள் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.
சாதாரணமான காலங்களில் போர் அல்லது உலகளாவிய பதற்றங்கள் ஏற்பட்டால், முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பான முதலீடாகக் கருதி தங்கத்தை நோக்கித்தான் ஓடுவார்கள். இதனால் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வது வழக்கம். ஆனால், தற்போது அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் உச்சத்தில் இருக்கிறது.
பொதுவாக போர் சூழல் காலங்களில் தங்கம் விலை ‘டாப் கியரில்’ எகிறும். ஆனால், தற்போது மேற்கு ஆசியாவில் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோதிலும், தங்கத்தின் விலை உயராமல் பெரும்பாலான நாட்களில் விலை குறைந்து வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது..
சர்வதேச சந்தையில் தங்கம் அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படுகிறது. போர்ச்சூழலால் நிலவும் நிச்சயமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் அமெரிக்க டாலர் என இரண்டையுமே கருதுகின்றனர். தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு கணிசமான உயர்ந்துள்ளது. டாலர் வலுவடையும்போது மற்ற நாட்டு நாணயங்களை (ரூபாய் போன்றவை) வைத்திருப்பவர்களுக்கு தங்கம் விலை அதிகமாக தெரியும். இதனால் அதன் தேவை குறைந்து விலை கட்டுக்குள் இருக்கிறது.
போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் டாலரை தாண்டியுள்ளது. இது உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது அதைக்கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் வங்கி ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்காமல் நீண்டகாலத்திற்கு உயர்த்தி வைக்கக்கூடும். வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் போது, வட்டி தராத தங்கத்தின் மீது முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது என்பதால் முதலீட்டாளர்கள் அதிலிருந்து விலகுகின்றனர்.
கடந்த 2025-ம் ஆண்டு முதலே தங்கம் விலை தொடாந்து ஏறுமுகமாகவே இருந்தது. போர் தொடங்கி ஆரம்ப நாட்களில் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அந்த உச்சநிலையில் இருந்தபோது பல முதலீட்டாளர்கள் தங்கம் கையில் இருந்த தங்கத்தை விற்று லாபத்தை ஈட்ட தொடங்கினர். இந்த விற்பனை அழுத்தம் காரணமாக விலை சரிவை சந்தித்தது.
மேலும் உலக நாடுகள் வட்டி விகிதம் குறித்து தெளிவான முடிவை அறிவிக்கும் வரை, தங்கம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தையில் ஏதேனும் ஒரு நிகழ்வு முன்கூட்டியே கணிக்கப்பட்டால், அதன் தாக்கம் ஏற்கனவே விலையில் பிரதிபலித்துவிடும். அமெரிக்கா-ஈரான் மோதல் நீண்ட நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்பதால் அதன் தாக்கம் முன்கூட்டியே தங்கத்தின் விலையில் சேர்ந்துவிட்டது. எனவே போர் தொடங்கியவுடன் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
இதற்கிடையே தங்கம் விலை அதிரடியாக குறைந்து வரும் நிலையில் மேலும் 30 சதவீதம் அளவிற்கு தங்கம் விலை குறையும் வாய்ப்பு உள்ளதாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
அதாவது, போர் பதற்றத்தால் கச்சா எண்ணெயின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஏறும் என்ற காரணத்தினால், புதிய முதலீடுகளை தங்கத்திற்கு பதில் கச்சா எண்ணெயில் மாற்றுகிறார்கள்.
மேலும் ஏற்கனவே தங்கத்தில் செய்த முதலீடுகளை திரும்ப பெற்று கச்சா எண்ணெய் முதலீடு செய்கிறார்கள்.
இதனால் ஈரான் போர் முடிவதற்குள் தங்கம் விலை ஒரு 30 சதவீதம் அளவிற்கு தங்கத்தின் விலை சரியக்கூடிய வாய்ப்பு உருவாகும். ஆனால் அது ஓரிரு நாட்கள் மட்டுமே நீடிக்கும். மீண்டும் புதிய உச்சத்தை அடைந்து அப்படியே நீடிக்கும் என்று கூறியுள்ளார்.
அதேசமயம், தங்கம் என்பது எந்த காலத்திலும் ஒரு 'பாதுகாப்பான முதலீடு' தான் என்றாலும், போர் தீவிரமடைந்தால், மக்கள் மீண்டும் தங்கம் வாங்கவே முற்படுவார்கள். எனவே, 5% முதல் 10% வரை குறுகிய காலச் சரிவு ஏற்படலாமே தவிர, 30% சரிவு என்பது தற்போதைய பொருளாதாரச் சூழலில் சாத்தியமில்லை என யுபிஎஸ், ஜேபி மோர்கன் போன்ற பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சில நிபுணர்கள் இந்தாண்டு இறுதியில் தங்கம் மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என்றும் கூறுகிறார்கள்.
இருப்பினும் போர் நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால் தங்கம் மீண்டும் ஒரு பாதுகாப்பான முதலீடாக மாறி விலை உயரவும் வாய்ப்புள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, தங்கம் வாங்க விரும்பும் பொதுமக்கள் அவசரப்படாமல் தினசரி விலை நிலவரத்தை கவனித்து வாங்குவது நல்லது என நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.