ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா?

ஆவின் பால் விலை மீண்டும் உயர்வா?

ஆவின் நிர்வாகம் பல்வேறு நிலைகளில் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனையை செய்து வருகிறது. சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால், பசும் பால் என ஒவ்வொரு வகையிலான பால் வினியோகம் நடைபெற்று வருகிறது.

ஆவின் பச்சை பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் விறக்கப்பட்டு வருவதாக பால்முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

திமுக ஆட்சி அமைந்து கடந்த 20 மாதங்களில் ஆவின் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலையையும் தமிழக அரசு உயர்த்தியது. இந்நிலையில் ஆவின் பச்சை பால் பாக்கெட்டில் உள்ள கொழுப்பு சத்தை குறைத்துள்ள நிலையில், பாலின் விலையை குறைக்காமல் அதே விலையில் விநோயகம் செய்யப்பட்டு வருவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பாலான பச்சை நிற பால் பாக்கெட்டில் கொழுப்பு சத்து 4.5%, திடசத்து 8.5% என இருந்ததை நிர்வாக காரணங்களுக்காக என்று கூறி இன்று (01.02.2023) முதல் கொழுப்பு சத்து அளவை 1% குறைத்து, அதாவது கொழுப்பு சத்து 3.5%, திடசத்து 8.5% என சத்துக்களின் அளவை குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், அதே விற்பனை விலையில் (500ML 22.00),  பச்சை நிற பாக்கெட்டில் "Cow Milk" என்கிற பெயரில் மக்களை ஏமாற்றும் செயலை கோவை மாவட்ட ஆவின் முன்னெடுத்துள்ளதையும், மக்கள் தலையில் மறைமுகமாக லிட்டருக்கு 3.00ரூபாய் விலை உயர்வை திணித்திருப்பதையும் (குறைக்கப்பட்ட கொழுப்பு சத்து அடிப்படையில் 1 Total Solids ரூபாய் 2.91ஆகும்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் தற்போது பால் கொள்முதல் தினசரி 10லட்சம் லிட்டருக்கும் மேல் குறைந்து ஆவினுக்கான பால் வரத்து கடும் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் சூழலில் தற்போதைய செயல்பாடுகள் ஆவின் பால் விற்பனையை படுபாதாளத்தில் தள்ளி விடும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்தில் கொள்ளுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக பொன்னுசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆவின் பால் விலையில் இப்போது எந்த மாற்றமும் செய்யவில்லை. கோவை மாவட்டத்தில் புதிதாக பசும்பால் 3½ சதவீதம் கொழுப்பு சத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள மக்கள் பசும் பாலை விரும்புவதால் அந்த மாவட்டத்தில் மட்டும் 22 ரூபாய் விலையில் அரை லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மற்ற மாவட்டங்களில் எப்போதும்போல் கொழுப்பு சத்து சதவீதத்துக்கு ஏற்ப பால் விற்பனை பழைய விலையிலேயே நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com