
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மழையின் அளவு அதிகரித்து விட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது சென்னை மாநகராட்சி. சென்னைக்கு அதிக மழையைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கவிருக்கிறது. இதற்காக இப்போதே துரிதமாக செயல்படத் தொடங்கி விட்டனர் சென்னை மாநகர ஊழியர்கள்.
கனமழையின் போது சென்னையில் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்களின் வாழ்விடம் பாதிக்கப்படும் என்பதால், அவர்களைத் தங்க வைக்க 169 முகாம்களை இப்போதே தயார் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர் மாநகராட்சி ஊழியர்கள். கடந்த சில ஆண்டுகளில் மழை பாதித்த பகுதிகளை சீரமைத்ததன் மூலமாக சென்னை மாநகராட்சிக்கு அதிக அனுபவம் கிடைத்துள்ளது. இதனடிப்படையில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரியுள்ளனர். மேலும் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் வடிகால் வசதியையும் அமைத்துள்ளனர்.
கடந்த கால தரவுகளின் படி சென்னையில் கிட்டத்தட்ட 87 இடங்களில் மழைநீர் அதிகளவில் தேங்குகிறது. இந்த இடங்களை அடையாளம் கண்டு புதிய வடிகால் வசதியை ஏற்படுத்தியும், மின்மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “44 பெரிய கால்வாய்கள் சென்னையில் தற்போது சுழற்சி முறையில் துப்புரவுப் பணியாளர்கள் உதவியுடன் தூர்வாரப்பட்டு வருகின்றன. சென்னையில் மொத்தம் 11,760 மழைநீர் வடிகால்கள் உள்ளன. இவற்றில் 1,034கி.மீ. தொலைவு வரை தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 201 குளங்கள் தூர்வாரப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
கால்வாய்களில் சேதமடைந்த இடங்களை சீரமைத்தும், தேவையான இடங்களில் புதிய கால்வாய்களை உருவாக்கியும் உள்ளோம். சென்னையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் அளவிற்கு தாழ்வான பகுதிகள் உள்ளன. அப்பகுதியில் இருக்கும் மக்களை கனமழை பெய்யும் நேரத்தில் தங்க வைப்பதற்கு 169 முகாம்களும் தயார் நிலையில் இருப்பதாக” அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறுமழை பெய்தாலே சென்னை மாநகரம் மழைநீரில் மிதக்கும் என்பதால், வடிகால் வசதி ஒன்றே தீர்வைத் தருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதற்கேற்ப பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும். மழைக்காலத்தில் மின் சாதனங்களை இயக்கும் போது, வெளியில் பயணிக்கும் போதும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.