

உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மருத்துவர் சங்கம் சார்பில் எரிந்த சிகரெட்டின் வடிவத்தில் பேனர் ஒன்று பாளையங்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மருத்துவர்கள் இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை பயன்பாட்டினால் சுமார் 80,000 புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுவதாகக் கூறினர்.
இந்தியாவில் புகையிலை பயன்பாடு என்பது மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாகும். புகையிலை மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களைப் பயன்படுத்துவதால், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 80,000 புதிய புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.
புகையிலையால் ஏற்படும் புற்று நோய்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானவை வாய்வழி புற்றுநோய்களாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 80,000 புதிய வாய் புற்றுநோய் வழக்குகள் கண்டறியப்படுகின்றன. புகையிலையில் உள்ள 'நிகோடின்' உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நுரையீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களுக்கும் காரணமாக அமைகின்றன. உலக அளவில் கண்டறியப்படும் வாய்வழி புற்றுநோய்களில்(oral cancer) கணிசமான பங்கு இந்தியாவில் உள்ளது.
புகையிலைப் பயன்பாடு புற்றுநோய் மட்டுமின்றி மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் நுரையீரல் பாதிப்பு போன்ற தீவிர தொற்றா நோய்களுக்கும் வழி வகுக்கும். புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதும், அந்தப் பழக்கத்தை கைவிடுவதும், ஆரம்ப நிலையிலேயே சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.