மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்: விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்!

அனுராக் தாக்கூர்
அனுராக் தாக்கூர்

டெல்லி காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்தார். இவரால் ஒரு சிறுமி உட்பட பத்துக்கும் மேற்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக உலக சாம்பின்ஷிப் பதக்கம் வென்ற வினேஷ் போகத், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா, ஷாக்ஷி மாலிக் உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அவர் தேசிய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஜனவரி் மாதம் போராட்டத்தை தொடங்கிய நிலையில் ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.

மத்திய அரசு பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கடந்த மே 28-ம் தேதி புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது எட்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது காவல்துறை. இதன் தொடர்ச்சியாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், பதக்கங்களை கங்கை நதியில் வீசுவோம் என்று மத்திய அரசுக்கு வீராங்கனைகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில், இதுவரை வீராங்கனைகளின் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு பதிலளித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர் பலரும்.

இந்நிலையில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், விளையாட்டு ஆர்வமுள்ள மல்யுத்த வீரர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும், வீரர்கள் அரசையும் நீதி மன்றத்தினையும் நம்ப வேண்டும். நாங்கள் அனைவரும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், காவல்துறை விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com