சாக்ரடீஸுக்கே முன்னோடி! அதிகாரவர்க்கத்தை அலறவிட்ட ஒரு தத்துவவாதியின் கதை!

Anaxagoras philosopher
Anaxagoras philosopher
Published on

ழமையான கிரேக்க தத்துவ வரலாற்றில், இயற்கை நிகழ்வுகளை தெய்வீகக் கதைகளால் அல்லாமல் அறிவியல் மற்றும் தர்க்கத்தின் மூலம் விளக்க முயன்ற முதல் அறிஞர்களில் ஒருவராக 'அனாக்ஸாகோராஸ்' திகழ்கிறார். உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள மனித அறிவு முக்கியம் என்ற கருத்தை முன்வைத்த அவர், தத்துவத்தையும், அறிவியலையும் இணைத்த ஒரு முன்னோடியாக வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

பிறப்பு மற்றும் வாழ்க்கை:

அனாக்ஸாகோராஸ் (Anaxagoras) கி.மு. 500ஆம் ஆண்டு கிளாசோமேனை (இன்றைய துருக்கி பகுதி) என்ற இடத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே கல்வி மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் கிரேக்கத்தின் அறிவு மையமாக விளங்கிய ஆத்தென்ஸ் நகரத்திற்கு சென்றார். அங்கு அவர் தத்துவஞானியாகவும், அறிவியலாளராகவும் புகழ் பெற்றார். ஆனால் அவரது புதிய சிந்தனைகள் பாரம்பரிய மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்ததால், தெய்வ நிந்தனை குற்றச்சாட்டுக்கு உள்ளானார். இதன் விளைவாக அவர் ஆத்தென்ஸிலிருந்து துரத்தப்பட்டு, லாம்ப்சாகஸ் நகரில் வாழ்ந்து அங்கேயே இறந்தார்.

‘நூஸ்’ (Nous) கோட்பாடு: அனாக்ஸாகோராஸின் முக்கிய தத்துவக் கருத்தாக 'நூஸ்' என்ற கோட்பாடு விளங்குகிறது. உலகில் உள்ள எல்லா பொருள்களும் சீரற்ற முறையில் இயங்க வில்லை. அவற்றை இயக்கும் ஒரு அறிவு சக்தி உள்ளது என அவர் கூறினார். அந்த அறிவு சக்தியே 'நூஸ்'. இது உலகிற்கு ஒழுங்கையும், இயக்கத்தையும் வழங்குகிறது என்றார். இந்தக் கருத்து, இயற்கையின் பின்னால் ஒரு அறிவு விதி உள்ளது என்ற சிந்தனையை வலுப்படுத்தியது.

பொருள்களின் அமைப்பு பற்றிய கருத்து: உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை என்று அனாக்ஸாகோராஸ் கூறினார். இந்தத் துகள்களை அவர் 'விதைகள்' அல்லது “ஹோமியோமெரிகள்” என்று அழைத்தார். எந்தப் பொருளும் முழுமையாக உருவாக்கப் படுவதும் இல்லை, முழுமையாக அழிவதும் இல்லை; துகள்களின் கலப்பும் பிரிப்புமே மாற்றங்களுக்குக் காரணம் என்றார். இந்தக் கருத்து, பின்னாளில் அறிவியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

வானியல் மற்றும் இயற்கை அறிவியல்: அனாக்ஸாகோராஸ் வானியல் துறையிலும் முக்கிய பங்களிப்புகளை செய்தார். சூரியன் ஒரு தீப்பந்தம், நிலா மண் போன்ற உடல் என்றும், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பூமியின் நிழலால் ஏற்படுகின்றன என்றும் அவர் விளக்கினார். அக்காலத்தில் இத்தகைய விளக்கங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிரானதாகக் கருதப்பட்டதால், அவர் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் சந்தித்தார்.

சாக்ரடீசின் மீது தாக்கம்: அனாக்ஸாகோராஸ் சாக்ரடீசின் நேரடி குரு அல்ல. இருப்பினும், அவரது சிந்தனைகள் சாக்ரடீசின் தத்துவ வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பிளேட்டோவின் நூல்களில், சாக்ரடீஸ் அனாக்ஸாகோராஸின் கருத்துகளை ஆர்வத்துடன் வாசித்ததாக குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு, அவர் சாக்ரடீசுக்கு ஒரு அறிவுத் தூண்டுகோலாக விளங்கினார்.

வரலாற்று முக்கியத்துவம்: அனாக்ஸாகோராஸ் இயற்கை நிகழ்வுகளை அறிவியல் காரணங்களால் விளக்கியதால், தத்துவத்தில் புதிய பாதையைத் திறந்தார். தெய்வீக விளக்கங்களிலிருந்து தர்க்கரீதியான விளக்கங்களுக்கு மனித சிந்தனையை மாற்றியவர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கிறது. அவரது கருத்துகள் பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்ற தத்துவஞானிகளின் சிந்தனைகளுக்கும் அடிப்படையாக அமைந்தன.

இதையும் படியுங்கள்:
ஒரு நிலவு முழுக்க மீத்தேன் இருந்தா என்ன ஆகும்? இதோ டைட்டன் ரகசியம்!
Anaxagoras philosopher

முடிவாக, அனாக்ஸாகோராஸ் தத்துவத்தையும், அறிவியலையும் இணைத்த ஒரு முன்னோடி. உலகம் அறிவு விதிகளால் இயக்கப்படுகிறது என்ற அவரது கருத்து, மனித சிந்தனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இன்றைய அறிவியல் சிந்தனையின் விதைகள் அவரது கருத்துகளிலேயே காணப்படுகின்றன. எனவே, அனாக்ஸாகோராஸ் மனித அறிவு வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பெற்றவர் என்று கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com