செயற்கை நுண்ணறிவு என்பது இன்றைய காலத்திற்கேற்றவாறு வளர்ந்து வரும் ஒரு அறிவியல் தொழில்நுட்பம். இது மருத்துவம், கல்வி என அனைத்தையும் தாண்டி, ஒவ்வொரு துறையிலும் AI என்ற பெயரில் புகுத்தபட்டு வருகிறது. ஏன், நம்மில் ஒருவராக இருக்கும் ஸ்மார்ட் போன்களில் AI கேமரா என்று ஆரம்பித்து, முழுவதும் AI யிலே இயங்கும் ஸ்மார்ட் போனாக உருமாறியுள்ளது. இதனால் என்ன நாம் பயன்கள் பெறப்போகிக்கிறோம்? அதை பற்றி தெரிந்து கொள்வோம்.
AI யில் இயங்கும் மொபைல்கள்:
முழுமையாக AI யில் இயங்கும் மொபைல்கள், அதிநவீன AI தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயனர்களின் ஒட்டுமொத்த செயல்பாடு மற்றும் அவர்களின் அனுபவத்தை கணிசமாக ஒவ்வொரு நாளும் மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அதனை பயன்படுத்துவோரின் நடத்தைகளில் இருந்து கற்றுக்கொண்டு, அவர்களின் தேவைகளை கணிப்பது மற்றும் அதற்கேற்ப செயல்பாடுகளை மாற்றியமைக்கும் திறன் காரணமாக, மற்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் தனித்து நிற்கின்றன இந்த சாதனங்கள். AI-குரல் உதவி (AI-driven voice assistants), நிகழ்நேர மொழிபெயர்ப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் (personalized recommendations) ஆகியவற்றுடன் இணைந்து இந்த மொபைல்கள் நம் உள்ளுணர்வை புரிந்து செயல்படுகின்றன.
இதன் நன்மைகள்:
AI மொபைல்களின் நன்மைகள் பன்மடங்கு. அவை AI- அடிப்படையிலான முக அங்கீகாரம் (facial recognition) மற்றும் கைரேகை ஸ்கேனிங் (fingerprint scanning) மூலம் ஒரு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கி பயனர் தரவுகள் சம்மந்தமான பாதுகாப்பை உறுதி செய்கின்றன. AI யில் இயங்கும் கேமராக்கள் சிறந்த புகைப்படங்களை படம் பிடிக்க தானாகவே போன் அமைப்புகளை சரி செய்து கொள்கின்றன. இதனால் இது புகைப்பட ஆர்வலர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. அதை உபயோகிப்பவரின் பயன்பாட்டு முறைகளைக் கற்று, அதன் மூலம் பேட்டரி மேலாண்மை மேம்படுத்தப்பட்டு, போனின் பேட்டரி ஆயுளை நீட்டிக்கிறது. கூடுதலாக, AI மொபைல்கள் நம் அன்றாட பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு தேவையான அறிவிப்புகள் (notifications) மற்றும் பிற செயல்பாடுகளை திறம்பட நிர்வகிக்கவும் ஒழுங்கமைக்கவும் உதவுகின்றன. பயனரின் வேலைப்பாடுகள் குறைக்கப்படுகின்றன.
சாதாரண ஸ்மார்ட் போன் vs AI மொபைல்:
சாதாரண ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் AI மொபைல்கள் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட (more personalized), சிறப்பான பயனர் அனுபவத்தை (adaptive user experience) வழங்குகின்றன. சாதாரண ஸ்மார்ட்போன்கள் நிலையான ப்ரோக்ராமில் ( static programming) இயங்குகின்றன. AI மொபைல்களோ பயனர் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தொடர்ந்து தன்னை தானே மேம்படுத்திக்கொள்கின்றன. இந்த டைனமிக் கற்றல் திறன் (dynamic learning capability) AI மொபைல்களை பயனர்களுக்கு ஏற்றவாறு மிகவும் திறமையாக செயல்பட வைக்கிறது.
AI மொபைல்கள் யார் யாருக்கெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?
AI மொபைல்கள் குறிப்பாக தொழில்நுட்ப ஆர்வலர்கள் (tech-savvy), பிஸியான தொழில் வல்லுநர்கள், பாதுகாப்பு (Privacy) மற்றும் புகைப்படக்கலைக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
இந்தியாவில் இருக்கும் சில AI மொபைல்கள்:
இந்திய சந்தையில் பல்வேறு விருப்பத்தேர்வுகளுக்கு ஏற்றவாறு முழுவதும் AI யில் இயங்கும் பல மொபைல் மாடல்கள் கிடைக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவையாக Samsung Galaxy S24 Ultra, Google Pixel 9 Pro Fold, OnePlus 13 மற்றும் Xiaomi Redmi Note 14 Pro+ 5G போன்ற மாடல்கள் இருக்கின்றன. இந்த மாடல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி AI அம்சங்களை உள்ளடக்கி, செயல்திறன் மற்றும் பயனர் திருப்தியை மேம்படுத்திக் கொடுக்கின்றன.
ஆக, டச் போன், ஸ்மார்ட்போன் என்றெல்லாம் தாண்டி இப்போதுள்ள நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு மொபைல் போன்கள் நம்மில் ஒருவராக அல்லது நாம் என்ன யோசிக்க வேண்டும் என்பதையும் கூறுகின்ற அளவிற்கு வளர்ந்துள்ளன. இதை நம் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி அதன் மொத்த பயன்களையும் பெற்றுக்கொள்வோம்.