பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டிருக்கிறது. இதுவரை சந்தை மதிப்பீட்டின் படி இந்த உச்சத்தை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை. இதனால் ஆப்பிள் பங்குதாரர்கள் மிகவும் உற்சாகமடைந் திருக்கின்றனர்.
சந்தை மதிப்பில் 6 நிறுவனங்கள் மட்டுமே டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை அடைந்துள்ளது. அவற்றில் 5 நிறுவனங்கள் தொழில்நுட்ப நிறுவனங்கள் எனபது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் நிறுவனத்தை தொடர்ந்து மைக்ரோசாப்ட் 2.5 டிரில்லியன், சவுதி அராம்கோ 2 டிரில்லியன், அல்பாபெட் 1.5 டிரில்ல்லியன், அமேசான் 1.3 டிரில்லியன் மற்றும் என்விடியா 1 டிரில்லியன் ஆகியவை மற்ற 5 நிறுவனங்கள் ஆகும்.
இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்பு மிக்க நிறுவனமாகவும் ஆப்பிள் உயர்ந்திருக்கிறது. நாஸ்டாக் Nasdaq எனப்படும் அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டாலர் என்ற அளவில் முடிவடைந்ததன் மூலம், அதன் சந்தை மதிப்பு 3.05 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட முடிந்தது.
சற்று மந்தமடைந்திருந்த தொழில் நுட்பத் துறையில் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு எழுச்சியினால் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை நன்றாக உச்சமடைந் திருக்கிறது . மேலும் ஐபோனின் சுறுசுறுப்பான விற்பனையாலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப் பட போகும் "ஆப்பிள் விஷன் ப்ரோ" என்கிற கலப்பு-ரியாலிட்டி ஹெட்செட் மீதான மக்களின் உற்சாகம் ஆகியவற்றினாலும் இந்நிறுவன பங்குகள் கூடுதல் பயன் அடைந்திருப்பதாக பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.