

நவீன கார்களில் ஃப்யூயல் பம்ப் டேங்குக்குள் பொருத்தப்பட்டிருப்பதால், எரிபொருள் குறைந்தால் காற்றை உறிஞ்சி சூடாகி சுருள் எரியும் அபாயம் உள்ளது; மாற்ற செலவு பத்தாயிரம் முதல் 18 ஆயிரம் வரை ஆகலாம். ரிசர்வில் ஓட்டும்போது டேங்கின் அடிப்பகுதி தூசி, துரு, அழுக்கு பில்டர், இன்ஜெக்டருக்கு சென்று மைலேஜ், செயல்திறன் குறையும்.
நள்ளிரவு, நெரிசல் நேரங்களில் எரிபொருள் தீர்ந்தால் பாதுகாப்பு, பண இழப்பு அபாயமும் அதிகரிக்கும். நிபுணர்கள் டேங்கில் கால்பங்கு எரிபொருள் இருக்கும் போதே நிரப்பும் பழக்கத்தை கடைபிடிக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
புதிதாக கார் வாங்குபவர்களுக்கு அந்த காரினுடைய சிறப்பு அம்சங்களை கூறி ரிசர்வில் இந்த வாகனம் 50 கிமீ போகும் என உற்பத்தியாளர்கள் கூறுவார்கள். அதனை மனதில் வைத்து காரின் டேஷ் போர்டில் இருக்கும் மஞ்சள் நிற எரிபொருள் எச்சரிக்கை விளக்கு (ரிசர்வ் லைட்) (Fuel Reserve Indicator) ஒளிரும் வரையோ அல்லது அடுத்து வாகனத்தை 20 கிலோமீட்டர் இயக்கிய பிறகு எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம் என அலட்சியமாக பலர் இருக்கிறார்கள்.
ஆனால் வாகனத்துறை நிபுணர்களோ இந்த பழக்கம் முற்றிலும் தவறு என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் முறையில் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நிபுணர்களின் எச்சரிக்கையை இப்பதிவில் காண்போம்.
ஃபியூயல் பம்பின் ஆயுள் குறைதல்
காரின் மிக முக்கிய பாகமான ஃப்யூயல் பம்ப் தற்போது பயன்பாட்டில் உள்ள நவீன கார்களில் எரிபொருள் டேங்கிற்கு உட்புறம் பொருத்தப்பட்டுள்ளது. பியூயல் பம்ப் டேங்கில் உள்ள பெட்ரோல் அல்லது டீசலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் அதே வேளையில் குறைவாக டேங்கில் எரிபொருள் இருந்தால் திரவத்திற்கு பதிலாக காற்றை உறிஞ்சுவதன் காரணமாக கடுமையாக சூடாகி விடும். ஓரிரு முறை இதுபோல் நடந்தால் ஃப்யூயல் பம்பிற்கு பாதிப்பில்லை என்றாலும் தொடர்ந்து நிகழும்போது பம்பின் சுருள் எரிந்துவிடும். பத்தாயிரம் முதல் 18 ஆயிரம் வரை அதனை மாற்ற செலவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ஜினுக்குள் சேரும் கழிவுகள்
இயல்பாகவே எரிபொருள் டேங்கின் அடிப்பகுதியில் தூசியும், துருவும் சிறிய அளவிலான அழுக்குகளும் படிந்திருக்கும். பம்ப் பாதி அளவு எரிபொருள் டேங்கில் இருக்கும்போது மேல் பகுதியில் இருந்து வழக்கமாக எடுத்துக்கொள்ளும்.
ஆனால் ரிசர்வ் முறையில் காரை இயக்கும்போது எரிபொருளை டேங்கின் அடிமட்டத்திலிருந்து உறிஞ்சுவதால் ஃப்யூயல் பில்டர் மற்றும் இன்ஜெக்டருக்கு டேங்கின் அடிப்பகுதியில் உள்ள அழுக்குகள் விரைவாக சென்று சேர்க்கின்றன. இதன் காரணமாக பில்டர் அடைபடுவதோடு நாளடைவில் இந்நிகழ்வுகள் தொடரும்போது மைலேஜ் குறைந்து இன்ஜினின் செயல் திறனும் பாதிக்கப்படும்.
நடுவழியில் நிற்கும் அபாயம்
தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், ஏசி பயன்பாடு காரணமாகவும், சாலையின் தன்மையை பொறுத்தும் ரிசர்வ் விளக்கு ஒளிர ஆரம்பித்ததில் இருந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட 40 முதல் 50 கிலோமீட்டர் வரை ரிசர்வ் வாகனத்தை இயக்கலாம் என்ற கூற்று மாறுபடலாம்.
எரிபொருள் நள்ளிரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், பண்டிகை கால போக்குவரத்து நெரிசல்களிலும் தீர்ந்து போனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, பண இழப்பும் ஏற்படும். டீசல் கார்களில் முழுமையாக எரிபொருள் டேங்க் காலியானால் பிறகு எரிபொருளை நிரப்பினாலும் `ஏர் லாக்` ஏற்பட்டு வாகனத்தை எளிதில் இயக்க முடியாத சிக்கலை ஏற்படுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்க து.
நிபுணர்களின் அறிவுரை
டேங்கில் எரிபொருளின் அளவு கால்பங்கு இருக்கும் போதே மறுபடியும் எரிபொருளை நிரப்பும் `கால்பங்கு` விதியை பின்பற்றுவதே சீரான வாகன இயக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது வாகன பராமரிப்பு நிபுணர்களின் பரிந்துரையாகும். ரிசர்வ் விளக்கு ஒளிரும் வரை காத்திருக்காமல் எரிபொருளை நிரப்பினால் சீரான வாகன இயக்கம் இருப்பதோடு தேவையில்லாத சிரமங்களையும் குறைக்கலாம்.
இந்த வழிகாட்டுதலின் மூலம் உங்கள் காரின் ஃபியூயல் பம்ப் பழுதடைவதைத் தடுத்து, ₹18,000 வரையிலான தேவையற்ற மருத்துவச் செலவு போன்ற கார் பழுதுபார்ப்புச் செலவுகளைத் தவிர்க்கலாம். மேலும், திடீர் பிரேக் டவுன் மற்றும் ‘ஏர் லாக்’ போன்ற ஆபத்துகளில் இருந்து தப்பித்து, என்ஜின் ஆயுளையும் வாகனத்தின் மைலேஜையும் சிறப்பாகப் பராமரிக்க முடியும்.