சமீபத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்து போட்ட காசோலை லட்சங்களில் ஏலம் போனதைத் தொடர்ந்து அவரது கையெழுத்து பற்றிய சில உண்மைகள் வெளிவந்துள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே அவர் உருவாக்கிய மிகப்பெரிய ஆப்பிள் சாம்ராஜ்யம் தான் நமக்கு ஞாபகம் வரும். இவரைப் போன்று பிரபலமானவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், சமூகத்தில் புகழானவர்களை நாம் கண்டால், அவர்களிடம் ஒரு ஆட்டோகிராஃப் வாங்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் உலகெங்கிலும் உள்ளது.
ஆனால் ஸ்டீவ் ஜாப்ஸ் யாருக்கும் இதுவரை ஆட்டோகிராஃப் போட்டதில்லையாம். அப்படியே யாராவது அவரிடம் ஆட்டோகிராப் கேட்டாலும் அதை மறுத்துவிடுவாராம். எனவே அவர் கையெழுத்து போட்ட ஆவணங்கள் தற்போது அரிதான பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. அப்படிதான் அவர் கையெழுத்து போட்ட காசோலை ஒன்று தற்போது பிரபலமாகியுள்ளது.
கடந்த 1976 ஆம் ஆண்டு, காசோலை மூலமாக 4.01 டாலர் செலுத்துவதற்கு அவர் கையொப்பம் போட்டுள்ளார். ‘ரேடியோ ஷாக்’ என்ற அமைப்பிற்கு ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்த காசோலை வழங்கப்பட்டுள்ளது. என்னதான் இந்த பணத்தின் மதிப்பு இன்றைய இந்திய மதிப்பில் 300 ரூபாய் இருக்கும் என்றாலும், அதில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களின் கையெழுத்து இருப்பதால் அரிதான பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த காசோலையை சமீபத்தில் ஏலம் விட்டனர். அப்போது இந்த காசோலை 25 ஆயிரம் டாலருக்கு ஏலம் போனது. அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் ரூபாய் 20 லட்சம்.
ஏனெனில் இந்த காசோலை வழங்கப்பட்ட 1976 ஆம் ஆண்டில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் அறிமுக ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் வெறும் 50 கம்ப்யூட்டர்கள் மட்டுமே இந்த மாடலில் தயாரிக்கப்பட்டது. இந்த மாடல்தான் ஆப்பிள் நிறுவனம் பின்னாலில் வெற்றி அடைவதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது.
அந்த காசோலையை உன்னிப்பாக கவனித்தால் அவரது பெயர் ஸ்டீவன் ஜாப்ஸ் என இருக்கும். அந்த சமயத்தில் அவர் தன் பெயரை ஸ்டீபன் ஜாப்ஸ் எனவே பயன்படுத்தி வந்துள்ளார். பின்னாளில்தான் தன் பெயரை ஸ்டீவ் ஜாப்ஸ் என மாற்றிக் மாற்றிக் கொண்டுள்ளார் என்பது நமக்குத் தெரிகிறது.