

சீனாவில் உள்ள மக்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தங்கள் குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறார்கள். இது தவிர, இன்னும் கோடிக்கணக்கான மக்கள் பல காரணங்களால் தனிமையிலேயே வாழ்கிறார்களாம். சீனாவினுடைய அரசு ஊடகமான Global Times-இன் அறிக்கையில், ஆய்வு நிறுவனங்களின் கணிப்புப்படி 2030-ஆம் ஆண்டுக்குள் சீனாவில் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 20 கோடியை எட்டலாம் என்று சொல்லப்படுகிறது.
தனக்கென்று யாரும் இல்லாமல் தனியாக இருப்பவர்களுக்கும், குடும்பத்தைப் பிரிந்து தூரமாக வந்து வேலை செய்பவர்களுக்கும் ஒரு பயம் இருக்கும்; அதாவது, "யாரும் அருகில் இல்லாதபோது இறந்துவிட்டால், அது வெளியே யாருக்குமே தெரியாமல் போய்விடும்" என்பதுதான் அது.
சீனாவில் இப்போது நிலவும் இந்தச் சூழல் ஏற்கனவே ஜப்பானில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அங்கு இதனை 'Kodokushi' Lonely Death என்று அழைக்கிறார்கள்.
மக்கள் தங்களின் முதுமைக் காலத்தில் அல்லது தீவிர வேலைப்பளு காரணமாகத் தனிமையில் இறப்பதும், பல நாட்கள் கழித்து அவர்கள் உடல் கண்டெடுக்கப்படுவதும் அங்கு பெரும் சமூகப் பிரச்னையாக உள்ளது. சீனா தற்போது அதே பாதையில் செல்வதை இந்த ஆப் (china phone app) பிரதிபலிக்கிறது.
இந்தச் சூழலில்தான் சீனா ஒரு வித்தியாசமான 'ஆப்'-ஐ (App) வெளியிட்டுள்ளது. இந்த ஆப் தான் தற்போது சீனாவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்று சொல்லப்படுகிறது. அப்படி என்னதான் இந்த ஆப் செய்யும்?
2025 மே மாதம் இந்த ஆப் வெளியிடப்பட்டுள்ளது. இதன் பெயர் "Are you dead?". இந்த ஆப்பை பயன்படுத்துவது மிகவும் சுலபம். அதாவது, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இந்த ஆப்பைத் திறந்து, அதில் இருக்கும் ஒரு பெரிய பட்டனைப் பயன்படுத்துபவர் அழுத்தவேண்டும். அப்படி அழுத்திவிட்டால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால், அழுத்தாமல்விட்டால் அவர்கள் ஏதோ பெரிய ஆபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த ஆப் எமர்ஜென்சி (Emergency) நம்பருக்குத் தகவல் கொடுத்துவிடும்.
இந்த ஆப் வெறும் பட்டனை அழுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாமல், போனில் இருக்கும் Accelerometer அசைவைக் கண்டறியும் கருவி மற்றும் Screen Time திரை பயன்பாடு ஆகியவற்றையும் கண்காணிக்கிறது. ஒருவேளை பயனர் பட்டனை அழுத்த மறந்துவிட்டாலும், போனில் அசைவுகள் இருந்தால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை ஏஐ AI மூலம் கணிக்க முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த ஆப் வெறும் மெசேஜ் மட்டும் அனுப்புவதில்லை. முதலில் குறிப்பிட்ட எமர்ஜென்சி நம்பருக்கு அழைப்பு விடுக்கிறது. அவர்கள் எடுக்கவில்லை என்றால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கோ தகவலை அனுப்புகிறது.
இந்த ஆப்பினுடைய பெயர் சர்ச்சைக்குரியதாக இருந்தது. நிறைய பேர் இதைக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதனால் இந்த ஆப்பைத் தடை செய்துவிடுவார்களோ என்று பயந்து, மக்கள் இதை வேகமாகப் பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த நிறுவனம் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆப்பின் பெயரை மாற்றப் பரிசீலிப்பதாக முடிவெடுத்துள்ளது. வெறும் 1,000 யுவானில் தயாரிக்கப்பட்ட இந்த ஆப்பினுடைய 10 சதவீதப் பங்கு, தற்போது 10 லட்சம் யுவான் என்று சொல்கிறார்கள். ஒரு பிசினஸிற்கு 'ஸ்மார்ட்டான' ஐடியா எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இது ஒரு பிசினஸ் வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், மனித உறவுகளின் வீழ்ச்சியாகவும் சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.