

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானர் உருவாக்கிய மனித உருவ சீன ரோபோ ஒன்று, 100 மீட்டர் தூரத்தை 9.32 வினாடிகளில் கடந்து, ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் வைத்திருந்த மனித உலக சாதனையை முறியடித்துள்ளதாக சீனாவின் ஒளிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரை மாரத்தான் போட்டியில், 'லைட்னிங்' எனப் பெயரிடப்பட்ட பிரகாசமான சிவப்பு நிற சீன மனித உருவ ரோபோ, தன் பெயருக்கேற்பப் போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, போட்டிக்குச் சற்றும் சளைக்காமல் வெற்றி பெற்றது.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஹானரால் உருவாக்கப்பட்ட, இரு கால்களில் நடக்கும் இந்த மனித உருவ ரோபோ , 13 மைல் பந்தயத்தை வெறும் 50 நிமிடங்கள், 26 வினாடிகளில் கடந்து, 12,000 மனிதப் போட்டியாளர்கள் அனைவரையும் தோற்கடித்ததோடு மட்டுமில்லாமல், கடந்த மாதம் லிஸ்பனில் உகாண்டாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் ஜேக்கப் கிப்லிமோவால் படைக்கப்பட்ட அரை மாரத்தானுக்கான மனித உலக சாதனையை கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் வித்தியாசத்திலும் முறியடித்தது.
பந்தயத்தின் முடிவில் ஒரு தடுப்புக்கம்பியில் மோதியபோது லைட்னிங்கின் வேகம் சற்றே குறைந்தது; பின்னர் அந்த இயந்திரம் மீண்டும் எழுந்து நின்று, ஒரு பரபரப்பான இறுதிப் போட்டியை நிகழ்த்தி மீண்டெழுந்தது.
ஹானரின் ரோபோக்கள் முழுமையான வெற்றியைப் பெற்றதோடு மட்டுமில்லாமல், மேடையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான பதக்கங்களையும் பெற்றன.
பெய்ஜிங்கின் ஒரு தொழிற்பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோபோக்கள் இடம்பெற்றன. இது கடந்த ஆண்டு நடந்த தொடக்கப் பந்தயத்தைவிட ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். கடந்த ஆண்டு பந்தயத்தில் பங்கேற்ற 21 மனித உருவ ரோபோக்களில் பல, தடுமாறின, கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டுச் சென்றன அல்லது தொடக்கக் கோட்டிலேயே சாய்ந்து விழுந்தன, மேலும் ஆறால் மட்டுமே இறுதிக் கோட்டைக் கடக்க முடிந்தது.
கடந்த ஆண்டின் அதிவேக ரோபோவான, தியாங்காங் என்ற பிரம்மாண்டமான இயந்திரம், அரை மாரத்தானை முடிக்க 2 மணி 40 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2009-ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் போல்ட் 9.58 வினாடிகளில் படைத்திருந்த ஆண்களுக்கான 100 மீட்டர் உலக சாதனையை இந்த ரோபோ முறியடித்து ஒரு புதிய சாதனையை பெற்றிருக்கிறது.
மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, இணையான பாதையில் ஓடிக்கொண்டிருந்த நிஜ ஓட்டப்பந்தய வீரர்கள், அந்த இயந்திரங்களின் வேகத்தைக் கண்டு வியந்தார்கள்.
மேலும் இந்த போட்டியில் 29 வயதான ஜாவோ ஹைஜி, இந்தப் பந்தயத்தை 1 மணிநேரம், 7 நிமிடங்கள் மற்றும் 47 வினாடிகளில் ஓடி முடித்தார்.
செயற்கை நுண்ணறிவு சிப்புகள், சென்சார்கள் மற்றும் பேட்டரிகளுக்கான விநியோகச் சங்கிலியில் சீனா ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பெய்ஜிங்கின் 2026-2030ஆம் ஆண்டுக்கான சமீபத்திய பெருந்திட்டத்தில், மூளைச் சிப்புகள், குவாண்டம் கணினி மற்றும் மனிதர்களைப்போல தோற்றமளித்து இயங்கும் ரோபோக்களால் இயக்கப்படும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல சிறப்பான எதிர்காலத் தொழில் நுட்பங்களுக்கான செயல்திட்டமும் உள்ளடங்கும்.