ஏலியன்களுடன் பேச முயற்சிப்பது ஆபத்தானதா?

Dark Forest Hypothesis
Dark Forest Hypothesis
Published on

2008 ஆம் ஆண்டு, டோரிடோஸ் (Doritos) நிறுவனம் தனது சிப்ஸ் விளம்பரம் ஒன்றை சூப்பர் பவுல் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. ஆனால் அந்த விளம்பரம் மனிதர்களுக்காக உருவாக்கப்படவில்லை; அது ஏலியன்களுக்காக உருவாக்கப்பட்டது. அந்த விளம்பரத்தை '1' மற்றும் '0' என்கிற பைனரி சிக்னல்களாக மாற்றி, EISCAT எனும் ஏஜென்சி மூலம், பூமியிலிருந்து 42 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திரக் கூட்டத்தை நோக்கிக் கதிர்வீச்சாக அனுப்பினார்கள். நாம் இங்கே இருக்கிறோம் என்பதை வெளி உலகிற்குத் தெரிவிக்கும் இந்த முயற்சி, விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியது: "ஏலியன்களுடன் தொடர்பு கொள்வது நல்லதா, கெட்டதா?".

தொடர்பு கொள்வதில் உள்ள ஆபத்து!

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், ஏலியன்களுக்கு மெசேஜ் அனுப்புவதை வன்மையாகக் கண்டித்தார். அவர், "கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது, அங்கே ஏற்கெனவே வாழ்ந்த பூர்வகுடி மக்களுக்கு அது பேரழிவில் முடிந்தது. அதுபோல, நம்மை விட அறிவில் சிறந்த ஏலியன்கள் நம்மைக் கண்டுபிடித்தால், அது மனித இனத்திற்கே ஆபத்தாக முடியலாம்" என்று எச்சரித்தார்.

நாம் பல ஆண்டுகளாக ஏலியன் சிக்னல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம், இதற்கு 'SETI' என்று பெயர். ஆனால், நாமாகவே வலியச் சென்று "நாங்கள் இங்கே இருக்கிறோம்" என்று செய்தி அனுப்புவதற்கு 'METI' என்று பெயர். நாம் அனுப்பிய அரசிபோ மெசேஜ் (Arecibo message) மற்றும் வாயேஜர் விண்கலத் தகடுகள் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. நாம் அனுப்பும் ஏலியன்கள் நண்பர்களாக இருந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அவர்கள் நம்மைக் கட்டுப்படுத்த நினைக்கும் எதிரிகளாக இருந்தால் என்ன செய்வது?

இதையும் படியுங்கள்:
நாம் பார்க்கும் பார்வையில் தெளிவும், பகுத்தறிவும் அவசியம்!
Dark Forest Hypothesis

இருண்ட காடு கருதுகோள் (Dark Forest Hypothesis)!

"பெர்மி பாரடாக்ஸ்" (Fermi Paradox) என்ற கோட்பாடு, "இந்தப் பிரபஞ்சத்தில் பில்லியன் கணக்கான கிரகங்கள் இருக்கும்போது, ஏன் இதுவரை எந்த ஏலியன் நாகரிகமும் நம் கண்ணில் படவில்லை?" என்று கேட்கிறது. இதற்குப் பதிலளிக்கும் ஒரு பயங்கரமான கோட்பாடுதான் 'இருண்ட காடு கருதுகோள்'.

இதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்தப் பிரபஞ்சத்தை ஒரு இருண்ட காடு என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்களும் கையில் ஒரு கத்தியுடன் அந்தக் காட்டில் உயிர் பிழைக்கப் போராடுகிறீர்கள். அப்போது தூரத்தில் துப்பாக்கியுடன் சிலர் நிற்பதைப் பார்க்கிறீர்கள். நீங்கள் "நான் இங்கே இருக்கிறேன்!" என்று கத்திக் கூப்பிடுவீர்களா? அல்லது சத்தம் இல்லாமல் பதுங்கிக் கொள்வீர்களா? அமைதியாக இருப்பதுதான் உயிர் பிழைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இந்தக் கோட்பாட்டின்படி, பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு நாகரிகமும் அந்தக் காட்டில் இருக்கும் வேட்டைக்காரனைப் போன்றது. ஒரு நாகரிகம், மற்றொரு நாகரிகத்தைக் கண்டுபிடித்தால், அது நட்பாக இருக்குமா அல்லது ஆபத்தானதா என்று தெரியாது. அதனால், தன் பாதுகாப்பை உறுதி செய்ய, அது மற்ற நாகரிகத்தை முதலில் தாக்கி அழித்துவிடவே முயற்சிக்கும். அதனால்தான், புத்திசாலி ஏலியன் நாகரிகங்கள் அனைத்தும், "ஒன்று அமைதியாக இருக்க வேண்டும், அல்லது அழிந்து போயிருக்க வேண்டும்" ("Quiet ones or dead ones") என்ற விதியைப் பின்பற்றி, தங்களை வெளிக்காட்டாமல் அமைதியாகப் பதுங்கியுள்ளன.

இதையும் படியுங்கள்:
நம் பலத்தை நாம் அறிவோம்: தன்னம்பிக்கையின் வெளிப்பாடு!
Dark Forest Hypothesis

இந்தச் சூழ்நிலையில், நாம் டோரிடோஸ் விளம்பரம் போன்ற செய்திகளை அனுப்புவது, இருண்ட காட்டில் "நான் இங்கே இருக்கிறேன்!" என்று சத்தம் போடுவதற்குச் சமம். ஒருவேளை நமது நகைச்சுவையான விளம்பரத்தை, அவர்கள் ஒரு 'மரண அச்சுறுத்தலாக' எடுத்துக்கொள்ளலாம். பிரபஞ்சம் 90 பில்லியன் ஒளியாண்டுகள் பரந்து விரிந்திருக்கிறது. 97% பிரபஞ்சத்திற்கு நாம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. 

சிலர், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாம் தொடர்ந்து செய்திகளை அனுப்ப வேண்டும் என்று கூறினாலும், இந்த 'இருண்ட காடு கருதுகோள்' மட்டும் உண்மையாக இருந்தால், மனித இனம் உயிர் பிழைக்க ஒரே வழி... அமைதியாக இருப்பதுதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com