பிரபஞ்சத்தில் நாம் மட்டும் இல்லை… இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் முக்கிய கண்டுபிடிப்பு!

dr nikku madhusudhan
dr nikku madhusudhan
Published on

பிரபஞ்சத்தில் பூமிக்கு அப்பால் உயிர்கள் இருக்கின்றனவா என்பது மனித குலத்தின் நீண்ட காலக் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைத் தேடும் பயணத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தலைமையிலான குழு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, தொலைதூரத்தில் உள்ள ஒரு கிரகத்தில் உயிரினச் செயல்பாடு இருப்பதற்கான வலுவான அறிகுறிகளைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிறந்த நிகு மதுசூதன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (IIT-BHU) தனது அறிவியல் பயணத்தைத் தொடங்கி, பின்னர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) உயர்கல்வி பயின்றவர். தற்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள இவர், 'K2-18b' எனப்படும் பூமிக்கு அப்பாற்பட்ட கிரகத்தை (exoplanet) ஆய்வு செய்த விஞ்ஞானிகள் குழுவிற்குத் தலைமை தாங்கினார். நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள, வேறு நட்சத்திரத்தை சுற்றி வரும் கிரகங்கள் எக்சோபிளானெட்டுகள் எனப்படும்.

120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள K2-18b கிரகத்தின் வளிமண்டலத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தபோது, அக்குழு ஒரு முக்கிய வாயுவைக் கண்டறிந்துள்ளது. அந்த வாயுவின் பெயர் டைமெதில் சல்பைட் (Dimethyl Sulphide - DMS). பூமியில் இந்த DMS வாயு கடல்களில் வாழும் பாசிகள் போன்ற உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு, K2-18b கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான அல்லது உயிரியல் செயல்முறைகள் நடைபெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகளைக் காட்டுகிறது.

பேராசிரியர் மதுசூதன் இது குறித்துப் பேசுகையில், இது உயிரினங்கள் இருப்பதற்கான நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், உயிரியல் செயல்பாடு இருப்பதற்கான மிகச் சிறந்த விளக்கமாக இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, சூரிய குடும்பத்திற்கு வெளியே உயிர்களைத் தேடும் முயற்சியில் ஒரு திருப்புமுனை தருணம் என்றும், இன்றைய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உயிரின அறிகுறிகளைக் கண்டறிய முடியும் என்பதை இது நிரூபித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஆயிரக்கணக்கான எக்சோபிளானெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் சில 'ஹைசீன் உலகங்கள்' (Hycean worlds) ஆக இருக்கலாம் என்ற கருத்தை மதுசூதன் முன்வைத்துள்ளார். அதாவது, மேற்பரப்பில் பரந்த கடல் பரப்பும், ஹைட்ரஜன் செறிவூட்டப்பட்ட வளிமண்டலமும் கொண்ட கிரகங்கள் இவை. K2-18b அத்தகைய ஒரு கிரகமாக இருக்கக்கூடும் என்ற அனுமானம், அங்கு உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியத்தை மேலும் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வெயில் அதிகரிக்கும்... வெளியே போகாதீங்க! வானிலை மையம் எச்சரிக்கை!
dr nikku madhusudhan

எக்சோபிளானெட்டுகளின் வளிமண்டலம், உருவாக்கம் மற்றும் அங்கு உயிர்கள் வாழும் தன்மை போன்ற விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் நிகு மதுசூதன், ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் போன்ற சக்திவாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். எம்ஐடி, யேல் மற்றும் பிரின்ஸ்டன் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

இந்தப் புதிய கண்டுபிடிப்பு, நாம் பிரபஞ்சத்தில் தனியாக இருக்கிறோமா என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. இந்த முக்கிய ஆய்வில் ஒரு இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் பங்கு பெருமைக்குரியது.

இதையும் படியுங்கள்:
உயர் இரத்த அழுத்தம்: உப்பும், வாழைப்பழமும்… புதிய ஆய்வு சொல்வது என்ன?
dr nikku madhusudhan

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com