2023 ஆம் ஆண்டு இணையதள முடக்கத்தால் ஈரான், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பொருளாதார பாதிப்பை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக இயக்கத்திற்கு இயற்கை அளித்துள்ள பல்வேறு கூறுகள் முக்கிய காரணங்களாக உள்ளன. தற்போது இந்த பட்டியலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இணைய சேவையும் இணைந்து இருக்கிறது. ஆம் இன்று இணைய சேவை இல்லாமல் மனிதனுடைய வாழ்க்கையை நடத்துவது என்பது மிக அரிதாக மாறிவிட்டது. தினசரி செய்யும் அத்தியாவசிய பயன்பாடுகள் முதல் ஆடம்பர பயன்பாடுகள் வரை அனைத்து பணிகளிலும் இணைய சேவையினுடைய பங்கு முக்கியமான ஒன்றாக மாறியிருக்கிறது. இதனால் இணைய சேவை மிகப்பெரிய பொருளாதார காரணியாகவும் உயர்ந்திருக்கிறது.
அதே நேரம் இணைய சேவை அரசால் அதிகாரப்பூர்வமாகவும் மற்றும் மோசடி, திருட்டுகளுக்காக தனி நபர்களாலும் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்படுகிறது. இதில் மிகப் பெரும்பான்மையான பாதிப்பை அரசின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டால் தான் ஏற்படுகிறது என்று சர்வதேச பொருளாதார வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், போர் பதற்றத்தின் காரணமாகவும், கலவரங்களை கட்டுப்படுத்தவும், வன்முறைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காகவும் அரசினால் இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு இணையத்தை அதிகம் முடக்கி ஈரான் நாடு முதலிடத்தைப் பெற்று இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான், அடுத்த இடத்தில் எத்தியோப்பியா, மரடோனியா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன. அரசாங்கம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இணைய சேவையை முடக்குகிறது. இப்படி முடக்கப்படும் இணைய சேவை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பொருளாதாரம் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சரிவை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டு ரஷ்யா இணைய சேவை முடக்கியது. இதன் காரணமாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
தவறான தகவல்கள், பொய் செய்திகளை கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே சமயம் கருத்து சுதந்திரமாக மாறிப்போன இணைய சேவையை முடக்குவது என்பதும் சரியான தீர்வாக இருக்காது என்று சர்வதேச பொருளாதார வர்த்தக நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.