எல் நினோ எச்சரிக்கை: தமிழகத்தில் வறட்சி அபாயம்? தப்புவது எப்படி?

தென்மேற்கு பருவமழை குறைவால் 12 மாவட்டங்கள் பாதிக்கும் அபாயம்; தப்பிக்க வழிகள் இதோ!
எல் நினோ - El Nino India
எல் நினோ - El Nino IndiaAI Image
Updated on

பசிபிக் பெருங்கடலில் கடல் நீர் வெப்பமடைதலால் உருவாகும் எல் நினோ இந்தியாவின் தென்மேற்கு பருவமழையை பலவீனப்படுத்தி, ஈரப்பதம் நிறைந்த காற்று வரவை குறைக்கிறது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்த்து பல பகுதிகளில் மழை குறைந்து வறட்சி, பயிர் சேதம், உணவு பற்றாக்குறை, குடிநீர் தட்டுப்பாடு, மின்சார தேவை அதிகரிப்பு போன்ற கடுமையான பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகள் உருவாகின்றன.

இது இந்தியாவின் தென்மேற்குப் பருவமழையை பலவீனப்படுத்தி, இந்தியாவிற்கு வரும் ஈரப்பதம் நிறைந்த காற்றைக் குறைத்து இயல்புக்கும் குறைவான மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. இதனால் இந்தியாவின் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பயிர்கள் காய்ந்து வறட்சி ஏற்பட்டு, விவசாய உற்பத்தியை குறைக்கிறது. உணவுப்பொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

பருவ மழை பாதிப்புக்கான காரணங்கள்:

பசிபிக் பெருங்கடலின் நடு மற்றும் கிழக்குப் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து கடல் நீர் சூடாவதால் காற்று திசை மாறும். வழக்கமான காற்று திசை மாறி, ஈரப்பதம் இந்தியப் பகுதிக்கு வருவது தடைபடுகிறது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பைவிடக் குறைவான மழைப் பொழிவு மற்றும் வறட்சி உண்டாகிறது.

விவசாயம் மற்றும் பொருளாதார தாக்கம்:

*விவசாய பாதிப்பு:

ஏரிகள், குளங்கள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக கீழ்நோக்கிச் செல்வதால் பாசனம் தடைபடுகிறது. நம்பகமான பாசன வசதி இல்லாத விவசாய நிலங்கள் முழுமையாக வறட்சியை எதிர்கொள்கின்றன. அதிக வெப்பம் காரணமாக பயிர்களின் வளர்ச்சி தடைப்பட்டு, பூக்கள் உதிர்தல் மற்றும் தானியங்கள் முதிர்ச்சியின்மை உண்டாகிறது. வறண்ட மற்றும் வெப்பமான சூழல் பயிர்களில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்கத்தை அதிகரிக்கிறது.

நெல் மற்றும் பருப்பு போன்ற முக்கிய காரீஃப்(Kharif) பயிர்களின் விதைப்பு தாமதமாகிறது. விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைவதால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் கிராமப்புற பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.

எல் நினோ - El Nino India
எல் நினோ - El Nino IndiaAI Image

*உணவு பற்றாக்குறை:

மழை பொய்த்துப் போவதால் விளைச்சல் குறையும். விளைச்சல் குறைவதால் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் கால்நடைத் தீவனங்களின் விலை சந்தையில் கடுமையாக உயரும்.

*குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்சார தேவை அதிகரிப்பு:

பருவ மழை பொய்த்துப் போவதால் ஏரிகள், அணைகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிரடியாகக் குறைகிறது. கடும் வெயில் காரணமாக நிலத்தடி நீர் வறண்டு, குடிநீர் வினியோகம் தடைபடுகிறது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்குச் சிரமம் ஏற்படுகிறது.

அதிக வெப்பத்தால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி, கூலர் மற்றும் மின்விசிறிகளின் பயன்பாடு அதிகமாகிறது. நிலத்தடி நீரை உறிஞ்சி இறைக்க விவசாயிகளுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. அத்துடன் விவசாயத்திற்கான மின்சார மோட்டார்கள் இயங்கும் நேரமும் அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
வனவிலங்கு பாதுகாப்பு: இளைஞர்களின் அதிரடிப் புரட்சி!
எல் நினோ - El Nino India

எல் நினோவால் மாநிலத்தில் ஏற்படும் பாதிப்பு:

எல் நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி அபாயம், பருவ மழை பற்றாக்குறை மற்றும் அணைகளில் நீர்மட்டம் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் வற்றுவதால் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன பற்றாக்குறை ஏற்படும். மழை மறைவுப் பிரதேசங்களில் வெப்பநிலை இயல்பை விட பல மடங்கு அதிகரித்து மக்கள் மத்தியில் நீரிழப்பு போன்ற உடல்நலக் குறைபாடுகள் அதிகரிக்கும்.

வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள்:

எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் குறைவான மழையில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க மாற்றுப் பயிர்கள் சாகுபடி, வறட்சியைத் தாங்கும் குறுகிய கால ரகங்கள் மற்றும் சரியான நீர் மேலாண்மை போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி பயிர்களுக்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்குதல், மறுசுழற்சி மற்றும் சிக்கனமான முறைகளைக் கையாளுதல், மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
புவி வெப்பமடைதலை தடுக்கும் கங்காருவின் ஜீரண மண்டலம்! எப்படி?
எல் நினோ - El Nino India

குறைந்த நாட்களில் விளையக்கூடிய பயிர்களைத் தேர்ந்தெடுப்பதும், அதிக தண்ணீர் தேவைப்படும் நெல்லுக்கு மாற்றாக சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளைப் பயிரிடுதல், இயற்கை இடர்பாடுகளில் இருந்து நிதிப் பாதுகாப்பு பெறத்தவறாமல் பயிர்க் காப்பீடு செய்தல் போன்ற பயிர் மேலாண்மை முறைகள் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் வறட்சி மற்றும் குறைவான மழையிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.

பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் பகுதிகளைக் கண்காணிக்கவும், நீர்நிலைகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

எல் நினோ உருவெடுக்கும் விதம், அது தமிழகத்தின் நீர்நிலைகள் மற்றும் வேளாண்மையில் ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள் குறித்த முழுமையான புரிதலைப் பெற்று, மாற்றுப்பயிர் சாகுபடி மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் வரவிருக்கும் வறட்சியை எதிர்கொண்டு உங்கள் விவசாயத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com