ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. நமது இந்தியாவைப் பொறுத்தவரை, டெல்லி போன்ற இடங்களில் அடிக்கடி சின்னச் சின்ன நில அதிர்வுகள் ஏற்படுவது சாதாரணமாக ஆகிவிட்டது. இந்தியாவின் டெக்டோனிக் பிளேட், யூரேசியன் பிளேடுக்கு அருகில் இருப்பதனால் இடங்களில் நிலநடுக்க அபாயம் அதிகம்.
நிலநடுக்கத்தை நம்மால் தடுக்க முடியாதுதான், ஆனால், டெக்னாலஜியை பயன்படுத்தி முன்கூட்டியே நாம் எச்சரிக்கையாக இருந்து கொள்ள முடியும். கூகுள், ஆண்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை (Android Earthquake Alerts System) அறிமுகப்படுத்தி உள்ளது. இது உங்கள் ஆண்ட்ராய்டு போனிலேயே default ஆக இருக்கும். நிலநடுக்கம் வருவதற்கு முன்னாடியே உங்களை எச்சரிக்கை செய்யும்.
இந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது?
கூகுளின் இந்த சிஸ்டம் உங்க போனை ஒரு சின்ன நிலநடுக்கம் கண்டறியும் கருவியாக (mini-seismometer) மாற்றிவிடும்.
போனில் திடீரென வித்தியாசமான அசைவுகள் ஏற்படும் போது, அது உடனே அதன் லொகேஷனுடன் சேர்த்து கூகுள் சர்வருக்கு டேட்டாவை அனுப்பும். பக்கத்துல இருக்கின்ற பல போன்களும் இதே போன்று அசைவுகளை கண்டுபிடித்தால், கூகுள் 'நிலநடுக்கம் வந்துவிட்டது' என்று உறுதிப்படுத்திவிட்டு, உடனே அந்த பகுதியில் இருக்கின்ற பயனாளர்களுக்கு எச்சரிக்கை அனுப்பும்.
இவ்வாறு, கூகுள் இரண்டு வகையான எச்சரிக்கைகளை அனுப்புகிறது.
Be Aware Alert:
இது கொஞ்சம் லேசான அதிர்வுகளுக்கு வரும்.
Take Action Alert:
இது மிக தீவிரமான அதிர்வுகளுக்கு வரும்.
இந்த எச்சரிக்கை வரும்போது, உங்க போன் 'Do Not Disturb' mode-ல் இருந்தாலும், அதிக சத்தத்துடன் எச்சரிக்கை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி ஆன் செய்வது?
1. முதலில், உங்கள் போன் ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதுக்கும் மேல் இருக்க வேண்டும்.
2. இன்டர்நெட், லொகேஷன் ஆனில் இருக்கிறதா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
3. அடுத்தது, போனில் 'Settings' க்கு செல்ல வேண்டும்.
4. அங்கு 'Safety & Emergency' என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இப்போது, 'Earthquake Alerts' நிலநடுக்க எச்சரிக்கைகள் ஆப்ஷனை தேடுங்கள். அது ஆஃப்-ல் இருந்தால், உடனே ஆன் செய்யலாம்.
ஒரு தடவை ஆன் செய்தால்போதும், நீங்கள் போனை பயன்படுத்தாவிட்டாலும் கூட, நிலநடுக்கம் வருவதற்கு முன்னாடியே எச்சரிக்கை வந்துடும். சில சமயங்களில் ஒரு சில நொடிகள் எச்சரிக்கை கூட உயிரைக் காப்பாற்ற உதவியாக இருக்கும். இந்த சிறிய அம்சம், பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றும்.