இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 5ம் கட்ட தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பல தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கும் கட்சியினர், அதை நிறைவேற்றுவார்களா என்பதுதான் தெரியவில்லை.
இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு மொபைல் ரீசார்ஜ்களின் விலை பன்மடங்கு உயரலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த தயாராகி வருகிறார்கள். இதனால் ஒரு தனிநபருக்கான ரீசார்ஜ் கட்டணம் கணிசமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 25% வரை ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த லாபத்தைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5G உட்கட்டமைப்பில் முதலீடு செய்து தங்களது எதிர்கால லாப விகிதத்தை அதிகரிக்க விரும்புவதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 25% கட்டண உயர்வு என்பது உண்மையிலேயே அதிகமானது தான். இருப்பினும் கிராமப்புற பயனர்கள் நிர்வகிக்கும் வகையில் இந்த கட்டண உயர்வு இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஏர்டெல்லின் சராசரி கட்டணத்தில் 29 ரூபாயும், ஜியோவின் சராசரி கட்டணத்தில் 26 ரூபாயும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால், அது தொடர்பான தொழில்துறையிலும் 10 முதல் 15 சதவீதம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதன்படி ஒரு ஆண்டில் தோராயமாக ஒரு சந்தாதாரருக்கு ரூபாய் 100 ரூபாய் அதிகரிக்கலாம். இதனால் இனிவரும் காலங்களில் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்கவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தொடக்கத்தில் இந்த கட்டண உயர்வை ஏர்டெல் மற்றும் ஜியோ கொண்டு வரலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதன் மூலமாக வலுவான நெட்வொர்க் கவரேஜ் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவை அதிகரிக்கும் என்பதால், பயனர்கள் அதிவேக நெட்வொர்க் இணைப்பை தடையின்றி பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்ப போட்டிகளுக்கு மத்தியில் சிக்கித் தவிப்பது சராசரி பொதுமக்கள் தான்.
இப்போது கட்டணத்தை உயர்த்தினால் இதுதேர்தலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்காகவே, தேர்தல் முடிந்த பிறகு இதை அமல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.