

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிறுவப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 'ஆல்கா மரம்' (Algae tree) நகர்ப்புற காற்று மாசுபாட்டை குறைக்க உருவாக்கப்பட்ட ஒரு அதிநவீன தொழில்நுட்ப புரட்சியாகும். இயற்கை சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் நகர்ப்புற காற்று மாசுபாட்டைக் கையாளும் நோக்கில் செயல் படுத்தப்படும் ஒரு ஸ்மார்ட் சிட்டி முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் பாசி மரத்தை போபால் நிறுவியுள்ளது.
தொழில்நுட்பம்:
இது மண்ணில் வளரும் உண்மையான மரம் அல்ல. 'மஷ்ரூம் வேர்ல்ட் குரூப்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இது, நுண்ணுயிரிகளான பாசிகளை (microalgae) அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு காற்று சுத்திகரிப்பு கருவியாகும்.
மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த பாசி மரம் 25 மரங்களுக்கு சமமான கார்பன் டை ஆக்சைட்டை உறிஞ்சும் திறன் கொண்டவை. பாசி மரம் என்பது உண்மையான மரம் அல்ல. தண்ணீராலும், மில்லியன் கணக்கான நுண்ணிய பாசிகளாலும் நிரப்பப்பட்டு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு உயரமான தொட்டி இது. இதன் உச்சியில் உள்ள பல சூரிய மின் தகடுகள் மூலம் இது இயக்கப்படுகிறது.
செயல்பாடு:
ஒளிச்சேர்க்கை மூலம் சுற்றியுள்ள காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, அதை உயர்தர ஆக்ஸிஜனாக மாற்றுகிறது.
சூரிய ஒளியைப் பயன்படுத்தி இந்த தொட்டிக்குள் உள்ள விளக்குகள், பம்புகள் மற்றும் உணரிகள் ஆற்றலை பெற்று செயல்படுகிறன. அங்குள்ள பாசிகள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி வளர்கின்றன. இதன் மூலம் சுற்றுப்புறத்திலிருந்து காற்று தொட்டிக்குள் இழுக்கப்பட்டு, இயற்கையில் தாவரங்கள் செயல்படுவதைப் போலவே இவை கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுத்து புதிய ஆக்சிஜனை வெளியிடுகின்றது. இவை சூரிய மின் தகடுகளால் இயக்கப்படுவதால், ஆற்றல் திறன் மிக்கதாகவும், பொது இடங்களில் வெளிப்புற நிறுவல்களுக்கு ஏற்றதாகவும் அமைகிறது.
முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்:
ஒரே ஒரு ஆல்கா மரம், முழுமையாக வளர்ந்த 25 மரங்களுக்கு இணையான வேலை செய்கிறது. இது ஆண்டுக்கு சுமார் 1.5 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, 1 டன் ஆக்சிஜனை வெளியிடுகிறது.
சூரிய சக்தியை (Solar power) மட்டுமே பயன்படுத்தி இயங்கும் வகையில் இதன் மேற்பகுதியில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன.
15 மீட்டர் சுற்றளவில் உள்ள PM2.5 (காற்றில் உள்ள நுண்ணிய நச்சுத் துகள்கள்) அளவை 45% முதல் 55% வரை குறைக்க வல்லது.
இந்த ஆல்கா மரம் போபாலில் உள்ள சுவாமி விவேகானந்தர் பூங்காவில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மரம் நடுவதற்கு போதிய இடமில்லாத நெருக்கடியான நவீன நகரங்களில், காற்று மாசுபாட்டை தீர்க்க இது ஒரு சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது.
இடப்பற்றாக்குறை, உள்கட்டமைப்பு அல்லது நீண்ட வளர்ச்சி சுழற்சிகள் போன்றவற்றால் பாரம்பரிய முறையில் மரம் நடுவதற்கு வரம்புகள் உள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட நகர்ப்புறங்களான சாலை ஓரங்கள், பூங்காக்கள் மற்றும் வணிக மண்டலங்களுக்காக இந்த அமைப்பு குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.