வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சூரிய கிரகணங்களும் சந்திர கிரகணங்களும் வானத்தில் தோன்றுவது உண்டு. இந்த கிரகணங்களை பார்க்க உலகம் முழுவதும் மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள். ஜோதிடர்கள் இந்த கிரகணங்களை வைத்து பலன் எழுதலாம் என்று காத்திருக்கின்றனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் சந்திரன் வந்து , சூரிய ஒளியினை பூமியில் பட விடாமல் சந்திரன் மறைப்பதே சூரிய கிரகணம் என்றழைக்கப்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி சுழலும் பொது பூமியின் நிழல் சந்திரன் மீது பட்டு அதன் ஒளியினை தடுக்கும் , இந்த நிகழ்வு சந்திர கிரகணம் என்றழைக்கப்படுகிறது.
2025 ஆம் முதலில் தோன்றுவது சந்திர கிரகணம் தான். வரும் மார்ச் 14 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் வானில் தோன்ற உள்ளது. இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நாடுகளில் தெளிவாக தெரியும்.
அடுத்ததாக இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் மார்ச் மாதம் 29 ஆம் தேதி வானில் தோன்ற உள்ளது. ஒரே மாதத்தில் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் தோன்றுகிறது. இந்த சூரிய கிரகணம் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள நாடுகள், வட அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஐரோப்பிய நாடுகள் மற்றும் வடமேற்கு ரஷ்யாவில் மட்டுமே காண முடியும். இந்த முதல் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் இரண்டையும் இந்திய நாட்டினர் பார்க்க முடியாது.
இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி இரவு 8.58 மணி முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.25 மணி வரை நீடிக்கும். இந்த நேரத்தில் சந்திரன் இரத்த நிறத்தில் காணப்படும். இந்த சந்திரனை 'பிளட் மூன்' என்று அழைப்பார்கள். இந்த சந்திர கிரகணம் இந்தியா மற்றும் துணைக் கண்ட நாடுகளிலிருந்து பார்க்க முடியும். மேலும் இந்த சந்திர கிரகணத்தை ஐரோப்பிய நாடுகள், அண்டார்டிகா, மேற்கு பசிபிக் பெருங்கடல் நாடுகள், ஆஸ்திரேலியா, இந்திய பெருங்கடல் நாடுகள் மற்றும் ஆசியாவின் பிற நாடுகளிலிருந்தும் காணலாம்.
2025 ஆம் ஆண்டின் கடைசி கிரகணம், செப்டம்பர் மாதம் 21-22 தேதிகளில் சூரிய கிரகணமாக வானத்தில் தோன்ற உள்ளது. அந்த சூரிய கிரகணத்தை நியூசிலாந்து, கிழக்கு மெலனேசியா, தெற்கு பாலினேசியா மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் இருந்து ஒரு பகுதி மட்டுமே பார்வையாளர்களுக்கு தெரியும். இந்த கிரகணத்தை இந்தியாவில் உள்ளவர்கள் பார்க்க முடியாது.