
டிஜிட்டல் யுகத்தின் இருண்ட பக்கம் இணையக் குற்றங்கள். நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் நம்மை அச்சுறுத்தும் இந்த குற்றங்களில், சமீபத்தில் அதிகம் பேசப்படும் மோசடி "பன்றிக் கொலை மோசடி" (Pig Butchering Scam). இது "முதலீட்டு மோசடி" எனவும் அழைக்கப்படுகிறது. மத்திய அரசு இந்த மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலையில்லாத இளைஞர்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், அல்லது அவசரமாக பணம் தேவைப்படுபவர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது. தினமும் பலர் இதில் பணத்தை இழந்து வருகின்றனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு, கூகுள் போன்ற பிரபலமான தளங்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர்.
பன்றி கொலை மோசடி: 2016 ஆம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் இந்த மோசடி கண்டறியப்பட்டது. "ஷா ஜு பான்" என்பது இதன் மற்றொரு பெயர். மாண்டரின் மொழியில் இதன் பொருள் "பன்றியை கொல்லும் விளையாட்டு". இங்கே, மோசடிக்கு இலக்காகும் நபர்கள்தான் 'பன்றிகள்'. அவர்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதே குற்றவாளிகளின் நோக்கம். போலியான ஆன்லைன் அடையாளங்களைப் பயன்படுத்தி, எளிதாக பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை இவர்கள் குறிவைக்கின்றனர்.
மோசடி எப்படி நடக்கிறது?
சமூக ஊடகங்கள், டேட்டிங் ஆப்கள், ஏமாற்றும் செய்திகள் எனப் பல வழிகளில் மோசடி செய்பவர்கள் இலக்கு மக்களைத் தொடர்பு கொள்கின்றனர். கூகுள் சர்ச், விளம்பரங்கள், ஸ்பான்சர் செய்யப்பட்ட பேஸ்புக் பதிவுகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
தங்கள் இலக்கை அடையாளம் கண்ட பின், ஆன்லைன் முதலீடுகள், கிரிப்டோகரன்சி வர்த்தகம் பற்றிப் பேசி, அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுகின்றனர்.
போலியான ஆன்லைன் வர்த்தக செயலிகளைப் பயன்படுத்தி, தாங்கள் லாபம் ஈட்டுவதாக நம்ப வைக்கின்றனர். ஆரம்பத்தில் சிறிய முதலீடு செய்யச் சொல்லி, அதற்கு லாபம் தருவது போலவும் காட்டுகின்றனர். இது பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெற உதவுகிறது.
நம்பிக்கை அதிகரித்தவுடன், அதிக லாபம் வேண்டுமென்றால் இன்னும் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். பாதிக்கப்பட்டவரும் பேராசையில் அதிக பணத்தைப் போடுகிறார்.
பணத்தை எடுக்க முயலும் போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். பெரும்பாலும், பிளாக்செயின் மூலம் பரிவர்த்தனைகள் நடப்பதால், பணத்தை மீட்பது கடினம்.
தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு, மார்ச் 2024 அறிக்கையில், பெரிய தொழில்நுட்ப தளங்களில் நடந்த 37,500 க்கும் மேற்பட்ட மோசடி புகார்களை ஆய்வு செய்தது. அதில், வாட்ஸ்அப் (42%), டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற தளங்களிலும் மோசடிகள் நடந்துள்ளன.
எனவே, ஆன்லைனில் முதலீடு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிக லாபம் தரும் வாக்குறுதிகளை நம்பாமல், நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த மோசடிகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.