

எல்லாவற்றையும் மனித அறிவு அறிந்துவிடும், விளக்கிவிடும் என்பதெல்லாம் அதீதமாகச் சொல்லப்படும் கற்பனைதான்!
இதை விளக்க ஒரு அற்புதமான சிந்தனை, சோதனை – THOUGHT EXPERIMENT - உண்டு. அதன் பெயர் - MARY’S ROOM AND THE LIMITS OF KNOWLEDGE! (மேரியின் அறையும் அறிவின் எல்லைகளும்) எல்லாமே உடல் அல்லது பொருள் சார்ந்தது என்ற இயற்பியல் நினைப்பைத் தவிடு பொடியாக்கும் ஒரு சோதனை இது!
ஃப்ராங்க் ஜாக்ஸன் (Frank Jackson) என்ற தத்துவஞானி பிரக்ஞையைப் பற்றிய ஆதாரமான கேள்வியை இந்த சிந்தனை சோதனை மூலம் எழுப்பினார்.
சோதனை இதுதான்:
மேரி என்ற ஒரு விஞ்ஞானி இயற்பியல் பற்றியும் நியூரோ விஞ்ஞானம் மற்றும் வண்ணங்களைப் பார்க்கும் பார்வை உள்ளிட்ட அனைத்தையும் நன்கு அறிந்த ஒரு மேதை. அலை நீளம், கண் எப்படி ஒளி மூலம் பார்வையைத் தருகிறது, சிவப்பு என்ற வண்ணத்தை எந்த மூளையின் செயல்பாடு குறிக்கிறது போன்ற எல்லா விவரங்களும் மேரிக்கு அத்துபடி...
ஆனால் மேரி தன் வாழ்க்கை முழுவதும் வண்ணமே இல்லாத ஒரு கறுப்பு-வெள்ளை அறையில்தான் இருக்கிறாள். ஒரு நாள் திடீரென்று தன் அறையை விட்டு வெளியே வந்த மேரி அழகான ரோஜா வண்ணம் கொண்ட ஒரு ரோஜாப்பூவை வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.
அவள் இப்போது புதிதாக எதையேனும் கற்றுக் கொண்டிருக்கிறாளா?
ஆம். என்ற விடையைச் சொன்னால் உலகியல் ரீதியாக இயற்பியல் விளக்கங்களால் மட்டும் அல்லாத ஒரு பிரக்ஞை மூலமான ஒரு அனுபவத்தை இப்போது பெறுகிறாள். வண்ணப் பார்வை எப்படி செல்லுலர் மற்றும் மாடுலர் மட்டத்தில் இயங்குகிறது என்பதை அறிந்தாலும் அது எப்படி இருக்கிறது என்பதை உண்மையிலேயே சிவப்பு வண்ணத்தைப் பார்த்தபோதுதான் உணரமுடிகிறது, இல்லையா?
அறையை விட்டு வெளியே வரும் முன்னர் மேரிக்கு வண்ணங்களைப் பற்றி அனைத்தும் அறிவாள். சிவப்பைப் பார்த்தவுடன் ஏற்படும் உணர்வையும் அவள் அறிவாள்.
மேரி அறையை விட்டு வெளியே வந்தவுடன் சிவப்பு வண்ண ஆப்பிளைப் பார்த்தவுடன் தனக்கு ஏற்படும் உணர்ச்சி அனுபவத்தை முதல் தடவையாகப் பெறுகிறாள். ஆகவே இயற்பியல் அறிவையும் தாண்டி பல உண்மைகள் உள்ளன. இதை வைத்து விஞ்ஞானி ஜாக்ஸன் கூறுவது இது தான்: வெறும் இயற்பியல் விஞ்ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு பிரக்ஞையை விளக்க முடியாது.
மூளையின் இயற்பியல் ரீதியான அறிவையும் தாண்டி ஒரு பொருளின் மீதான அனுபவம் என்று ஒன்று இருக்கிறது! மனம் என்பது இயற்பியல் சார்ந்த ஒன்று என்ற கருத்திற்கு இது வலுவான சவாலை விடுகிறது.
எல்லாமே அறிவியல் மூலமாக விளக்க முடியும் என்ற கருத்து தவிடுபொடியாகி அறிவுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம் உள்ளன என்பதையும் பார்ப்பதெல்லாம் அப்படியே நிஜமல்ல என்பதையும் இந்த சிந்தனை சோதனை விளக்குகிறது.
இதுபோன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட சிந்தனை சோதனைகளைப் படித்தால் வாழ்வின் சில மர்மங்கள் நமக்குப் புரியவரும்!
உலகைப் பார்க்கும் உங்களின் பார்வையில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழும். வெறும் புறக் காரணிகளையும் தர்க்கங்களையும் மட்டும் நம்பியிருக்காமல், அக உலகப் பிரக்ஞையின் உன்னத நிலையை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம், உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகளையும், பிரபஞ்சத்தின் விவரிக்க முடியாத அழகுகளையும் புதியதொரு தத்துவார்த்தப் புரிதலுடன் ரசிக்கத் தொடங்குவீர்கள்.