Tesla நிறுவனத்தின் ரோபோ அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளரையே தாக்கிய சம்பவம் பணியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே காலத்தில் தொழில்நுட்பம் என்பது அசுர வளர்ச்சி அடைந்து உலகை அதிவேகமாக மாற்றி வந்தாலும், மறுபுறம் அதனால் மக்களின் உயிருக்கு ஆபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட சம்பவம்தான் தற்போது டெஸ்லா நிறுவனத்தில் நடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரோபோ ஒன்று பொறியாளரைத் தாக்கி படுகாயம் ஏற்படுத்திய செய்தி தற்போது வெளியே தெரிந்து பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் அமைந்துள்ள டெஸ்லா தொழிற்சாலையில், வாகன உற்பத்திக்காக புதிதாக வடிவமைக்கப்பட்ட ரோபோ பொறியாளரை தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். அதாவது டெஸ்லா ரோபோ வாகன உதிரிபாகத்தை அசெம்பிள் செய்து கொண்டிருந்த நேரத்தில் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொறியாளரை திடீரென தாக்கி காயம் ஏற்படுத்தியது.
பொதுவாகவே கார் தொழிற்சாலைகளில் அதன் உதிரி பாகங்களை ஒன்றாக இணைப்பதற்கும், நகர்த்துவதற்கும் ரோபோக்களையே பயன்படுத்துவார்கள். அந்த ரோபோக்களில் ஒன்றுதான் பொறியாளரை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது. அந்த சமயத்தில் தான் புதிதாக டெஸ்லா நிறுவனத்தில் ரோபோக்கள் நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்றதால், இந்த செய்தி வெளிவராமல் அப்படியே மறைத்து விட்டார்கள்.
ஆனால் அந்த சமயத்தில் பணியாளர் ஒருவர் எடுத்த வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் பரவி வருவதால், தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக இந்த ரோபோ தொழில்நுட்பத்தில் ஏதாவது தவறு ஏற்பட்டால் அது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.