
சுனாமி என்ற இயற்கை பேரழிவை பார்த்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் சில இடங்களில் இதன் தாக்கம் இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள மக்கள் எப்படி இதை சமாளிக்கிறார்கள்? சுனாமியை (Tsunami) கணிக்க முடியுமா?
கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் அல்லது நிலச்சரிவுகளால் கடல் மேற்பரப்பில் உருவாகும் பெரிய அலைகள்தான் சுனாமிகள் ஆகும். விஞ்ஞானிகளால் சுனாமியின் சரியான நேரம் அல்லது இருப்பிடத்தைக் கணிக்கமுடியாது என்றாலும் நில அதிர்வு நடந்த பிறகு அதன் சாத்தியக் கூறுகளை உடனடியாக கணிக்கமுடியும். NOAA’s DART மிதவைகள், GPS-அடிப்படையிலான அயனோஸ்பெரிக் கண்காணிப்பு (ionospheric monitoring) போன்ற மேம்பட்ட அமைப்புகள் கடலில் ஏற்படும் அழுத்த (Pressure) மாற்றங்கள், அலை வடிவங்களை (wave patterns) நிகழ்நேரத்தில் கண்டறிந்து; அதிகாரிகளை சில நிமிடங்களுக்குள் எச்சரிக்கைகளை வழங்க உதவுகின்றன. ஜப்பான், அமெரிக்காதான் இந்த தொழில்நுட்பங்களை முன்னோடியாகக் கொண்டுள்ளன. இதன் சமீபத்திய கண்டுபிடிப்புகள் பூகம்பத்தால் தூண்டப்படாத சுனாமிகளுக்கு (non-earthquake induced tsunamis) கூட விரைவான எச்சரிக்கைகளை வழங்குகின்றன.
சுனாமிகளின் வகைகள்
உள்ளூர் (Local) சுனாமிகள்: நிலப்பகுதியில் இருந்து 100 கி.மீ.க்குள் நிகழ்கின்றன. இதன் அலைகள் மிக விரைவாக கரையைத் தாக்கும்.
பிராந்திய (Regional) சுனாமிகள்: நிலப்பகுதியில் இருந்து 100 – 1,000 கி.மீ தொலைவில் இது நிகழும். இதனால் 1–3 மணி நேரத்திற்கு முன்பே மக்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியும்.
தொலைதூர அல்லது டெலி-சுனாமிகள் (tele-tsunamis): 1,000 கி.மீ தள்ளி நிகழ்கின்றன. நிலப்பகுதியில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த போதிய நேரம் கிடைக்கும்.
எந்தெந்த நாடுகளில் அதிகம் வெளிப்படுகின்றன?
சுனாமியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் டெக்டோனிக் தட்டு (tectonic plate) எல்லைகளில் இருக்கும்; குறிப்பாக பசிபிக் நெருப்பு வளையத்தில் (Pacific Ring of Fire) அமைந்துள்ளன. ஜப்பான், இந்தோனேசியா, சிலி, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்கா (குறிப்பாக: அலாஸ்கா, ஹவாய்)
அடிக்கடி பேரழிவு தரும் சுனாமிகளை எதிர்கொண்டுள்ளன. இந்த நாடுகள் எப்போதும் தயார் நிலையில் இருப்பதற்காக இதில் அதிக முதலீடு செய்துள்ளன.
ஜப்பானில் செங்குத்து வெளியேற்றும் கட்டிடங்கள் (vertical evacuation buildings), சுயமாக உயர்த்தும் கடல் சுவர்களைப் (self-raising seawalls) போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் இந்தோனேசியா, சிலி ஆகியவை சமூக பயிற்சிகள் (community drills), முன்கூட்டிய எச்சரிக்கை (early warning systems) அமைப்புகளை இன்னும் நம்பியுள்ளன.
இயற்கையை தடுக்க முடியாது ஆனால் சுனாமிகளைத் தடுக்க முடியாவிட்டாலும் அவற்றின் தாக்கத்தைக் கணிசமாக குறைக்கலாம். அந்நேரத்தில் வரும் அலை ஆற்றலை (wave energy) உறிஞ்சுவதற்கு சதுப்புநிலகாடு வளர்ப்பு, AI- மேம்படுத்தப்பட்ட ஒலி உணரிகள் (acoustic sensors), முன்கூட்டியே கண்டறிவதற்கான காந்தப்புல கண்காணிப்பு (magnetic field monitoring) ஆகியவை அடங்கும். இதோடு கடலோர மண்டல சட்டங்கள், மீள்தன்மை உள்கட்டமைப்பு (resilient infrastructure), பொதுக் கல்வி பிரச்சாரங்கள் மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன.